இந்தியாவின் சட்ட திட்டங்கள் மாறவேண்டும்: கீர்த்தி சுரேஷ் பேச்சு..

சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சுனில், ராதிகா உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரிவால்வர் ரீட்டா’ படம் வருகிற 28-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இதற்காக நடைபெற்ற சந்திப்பில் ‘ரிவால்வர் ரீட்டா’ குறித்து, அதன் படக்குழுவினர் குறித்தும் விரிவாக பேசினார்.
அதனைத் தொடர்ந்து, நாயகியாகி 12 ஆண்டுகள் ஆனது குறித்து கீர்த்தி சுரேஷ் விவரிக்கும்போது, ‘திரைத் துறைக்கு வந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், கடலில் ஒரு துளிபோல தான் கற்றுக் கொண்டுள்ளேன். இன்னும் நிறைய கற்றுக்கொள்ள ஆசை இருக்கிறது. இப்போது தான் திரையுலக வாழ்க்கை தொடங்குவது போல உணர்கிறேன். இன்னும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் செய்ய ஆசைப்படுகிறேன்.
நிறைய கிண்டல்கள், கடினமான தருணங்களை தாண்டி வந்திருக்கிறேன். சமூக வலைதளத்தில் பரவும் எதிர்மறை கருத்துகளுக்குள் சென்றதில்லை. நான், எனது வேலை என போய்க் கொண்டே இருப்பேன்’ என தெரிவித்துள்ளார் நம்பிக்கையுடன்.
மேலும், பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு, ‘இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு குறைவாகவே உள்ளது. அமெரிக்கா அல்லது துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றால் அங்கு பாதுகாப்பு அதிகம். அங்கு சட்ட திட்டங்களே வேறு மாதிரி இருக்கும். அவற்றுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் குறைவுதான். இது மாற வேண்டும்’ என தெரிவித்துள்ளார் கீர்த்தி.

