ராஜமவுலியின் சர்ச்சை பேச்சுக்கு, ராம் கோபால் வர்மா ஆதரவு..

பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, தற்போது ராஜமவுலி-மகேஷ்பாபு கூட்டணியில் ‘வாரணாசி’ என்ற படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் டைட்டில் , பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த வெளியீட்டு நிகழ்வில் ராஜமவுலி பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தியது.
படத்தின் பெயர்-டீசரை அகண்ட திரையில் வெளியிட முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், குழப்பங்கள் எழுந்ததும் மேடையில் ஏறிய ராஜமவுலி, ‘எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், என் அப்பா எப்போதும் நான் அனுமனால் ஆசிர்வதிக்கப்பட்டு வருவதாகக் கூறுவார். இந்த தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டபோது, எனக்கு கடுமையாக கோபம் வந்தது. இப்படித்தான் அனுமன் எனக்கு உதவுவாரா? அனுமன் இந்த முறையாவது எனக்கு இதை சரிசெய்வாரா?’ என்றார்.
கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்பவர், தன் படத்துக்கு ‘வாரணாசி’ என்று தலைப்பிட்டு புராணக் கதாபாத்திரங்களைப் பயன்படுத்தியது ஏன்? என ராஜமவுலிக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. தற்போதும் இது குறித்த விவாதங்கள் தொடர்கிறது.
மேலும் ‘வாரணாசி’ படத்தலைப்பை முன்னதாக பதிவு செய்திருந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் குறுக்கீடு செய்துள்ளது ராஜமவுலி சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ராஜமவுலிக்கு எதிராக பரப்பப்படும் விமர்சனங்களை பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா கடுமையாக சாடியுள்ளார். ‘கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருப்பது குற்றமல்ல என்றும், ஒரு கேங்ஸ்டர் படம் எடுக்க, இயக்குநர் கேங்ஸ்டராக மாற வேண்டுமா? திகில் படம் எடுக்க பேயாக மாற வேண்டுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

