‘சிக்மா’ படம் ரிலீசுக்கு பிறகு, ஹீரோவாக நடிக்கிறார் ஜேசன் சஞ்சய்?

தமிழ்த் திரையுலகில், விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் தனித்து முத்திரை பதிக்கும் முயற்சியில், தற்போது ‘சிக்மா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து கோடைமுறையில் ஜேசன் சஞ்சய்யின் முதல் படமான ‘சிக்மா’ படத்தை வெளியிடும் முடிவில் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் ஜேசன் சஞ்சய்யின் முதல் படமே இன்னும் வெளியாகாத நிலையில், அவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் ஹீரோவாக நடிப்பதற்கு வருகின்றன. முன்னதாக, சுதா கொங்காரா உட்பட சில இயக்குநர்கள் ஜேசன் சஞ்சய்யை நடிக்க வைக்க முயற்சித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இயக்குநராக பயணிக்கும் முடிவில் உறுதியாக இருந்துவிட்டார் ஜேசன்.
அதனைத்தொடர்ந்து தற்போது மீண்டும் அவரை ஹீரோவாக நடிக்க வைக்க பல வாய்ப்புகள் வருகின்றன. ஜேசன் சஞ்சய்க்கு நெருக்கமான சிலர் அவரை ஹீரோவாக நடிக்கும்படி விருப்பமுடன் கூறி வருகிறார்கள். குறிப்பாக அவருடைய தந்தை ‘ஜனநாயகன்’ படத்துடன் சினிமாவிலிருந்து விலகுவதால், ஜேசனை அறிவுறுத்தி வருகிறார்கள். ரசிகர்களும் ஆர்வமுடன் எதிர்பார்க்கிறார்கள்.
இந்நிலையில், முதல் படமான ‘சிக்மா’ திரைப்படத்தின் ரிலீசுக்கு பிறகு, அடுத்த படத்தில் கமிட்டாவது என்ற முடிவிலும் ஜேசன் சஞ்சய் இருப்பதாக கோடம்பாக்க வட்டாரம் தெரிவிக்கிறது. சமீபகாலமாக இயக்குநர்கள் ஹீரோவாக அறிமுகமாவது அதிகரித்து விட்ட நிலையில், ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படம் ரிலீஸான பிறகு ஹீரோவாகலாம் எனவும் ரசிகர்களால் நம்பப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

