ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து வழக்கில், நீதிபதி இன்று முக்கிய உத்தரவு..
தமிழ்த்திரையில் சிறந்த நடிகர் ஜெயம் ரவி. பின்னணி பலம் இருந்தாலும், தனது திறமையை வளர்த்து படிப்படியாய் முன்னேறி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராய் நிற்கிறார்.
அண்மையில், அக்கா-தம்பி பாசத்தை மையமாக கொண்டு ‘பிரதர்’ படம் வெளியானது. இப்படத்தை குடும்பங்கள் கொண்டாடும் வகையில் அமைந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 9-ந் தேதி, தனது எக்ஸ் தள பக்கத்தில், நீண்டகால யோசனை மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன்.
இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும், அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்ட முடிவு’ என அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த முடிவினால், அவரது ரசிகர்கள் சற்று ஷாக் ஆகினர். பின்னர், தனது பிறந்த நாள் அன்று.. மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், ‘தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்றும், 2009 ஆண்டு பதிவு செய்த தங்கள் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும்’ என கோரியிருந்தார்.
இதையடுத்து, ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதில், விவாகரத்து முடிவை ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்துள்ளார் என்றும், அது என் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக எடுக்கப்பட்டது.
இந்த விவாகரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை, நான் தனிப்பட்ட முறையில் ஜெயம் ரவியை சந்தித்துப் பேச அனுமதி கேட்டும், இதுநாள் வரை அனுமதி கிடைக்கவில்லை.
விவாகரத்து விஷயத்தில் அவருடன் தனிப்பட்ட முறையில் பேச காத்திருக்கிறேன்’ என தெரிவித்திருந்தார்.
இச்சூழ்நிலையில், ஜெயம் ரவி தொடர்ந்த விவாகரத்து வழக்கு இன்று சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் விசாரணைக்கு வந்தது. இதில் ஜெயம் ரவி, நேரில் ஆஜராகி இருந்தார். ஆர்த்தி காணொலி காட்சி மூலமாக ஆஜராகி இருந்தார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, இருவருக்கும் இடையேயான பிரச்சினை தொடர்பாக, ‘குடும்ப நல நீதிமன்ற சமரச தீர்வு மையத்தின் மூலம் இன்றைய தினமே சந்தித்து பேச இருவருக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.
அங்கு எடுக்கப்படும் முடிவு தொடர்பான விபரங்களை, இன்றைய தினமே தாக்கல் செய்ய வேண்டும்’ என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இருமனம் இணைந்து ஒருமனமாகி, மீண்டும் நறுமணமாகுமோ.!
