இளையராஜாதான் பலரை குடிகாரனாக மாற்றியது: இயக்குனர் மிஷ்கின் ருசிகர பேச்சு

‘இசைஞானி’ இளையராஜா பலரை குடிகாரனாக மாற்றினாரா? இதோ.. மிஷ்கின் பேசிய விஷயத்திற்குள் போவோம்..
இயக்கத்திலும் நடிப்பிலும் தனது தனித்துவத்தை தவறாமல் காண்பித்து வருகிறார் மிஷ்கின். தற்போது, இவர் விஜய் சேதுபதி நடிப்பில் ‘ட்ரெய்ன்’ படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், தினகரன் இயக்கத்தில் சோமசுந்தரம் நடித்திருக்கும் ‘பாட்டில் ராதா’ திரைப்பட விழாவில் வெற்றிமாறன், லிங்குசாமி, அமீர் உள்பட பலர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் பேசிய மிஷ்கின்,
‘நான் மிகப்பெரிய குடிகாரன். மதுவை ரசித்து, ருசித்து குடிப்பவன். ஆனால், ஒருபோதும் அந்த மது என்னை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது கிடையாது.
நான் உதவி இயக்குநராக இருந்தபோது குடிப்பதற்காக செல்வேன். கைகளில் இரண்டு கொசுவர்த்திகளுடன் செல்வேன். ஏனெனில், குடிக்க ஆரம்பித்தால் சினிமா பேசுவோம். அதேபோல் இளையராஜாவை பாடுவோம். நான் பாட ஆரம்பித்தால் எங்கிருந்தோ எனக்கு ஒரு பாட்டில் வந்துவிடும்.
முக்கியமாக இளையராஜாதான் பலரை குடிகாரனாக மாற்றியது. அவர்தான் குடிக்கு ஆரம்பப் புள்ளி. இந்த போதைகளை விடவும், இளையராஜா மிகப்பெரிய போதை.
இந்த ‘பாட்டில் ராதா’ படமானது, குடிக்கு அடிக்ட் ஆன ஒருவனை எப்படி அதிலிருந்து மீட்க வேண்டும்; அவனிடம் எப்படி அன்பு செலுத்த வேண்டும் என்பதை பேசுகிறது.
குடி எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. குடி இல்லாத நாடே இல்லை. சாராயம் காய்ச்சும் அளவுக்கு குடியில் எனக்கு அனுபவம் இருக்கிறது.
கண்டிப்பாக, இந்தப் படமும் பெரும் நம்பிக்கையை கொடுக்கும். சோமசுந்தரம் இந்தப் படத்தில் அப்படி நடித்திருக்கிறார். அதேபோல், ஜமா இயக்குநர் பாரி இளவழகனும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்’ என்றார்.
