சிரஞ்சீவியின் புதிய படம் தொடக்கம்

Web Ads

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 (#ChiruBobby2) திரைப்படத்தின் பிரம்மாண்ட தொடக்க விழா இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இயக்குநர் பாபி கொல்லி இயக்கத்தில், கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் பூஜை விழாவில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் மற்றும் நாகபாபு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

‘வால்டேர் வீரய்யா’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சிரஞ்சீவி – பாபி கொல்லி கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பல பிரம்மாண்ட படங்களை தயாரித்துள்ள கே.வி.என் புரொடக்ஷன்ஸ், தெலுங்கில் தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும்.

தொடக்க விழாவில் பவன் கல்யாண் முதல் காட்சிக்கான கிளாப்பை அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார். சுஸ்மிதா கொணிதெலா கேமராவை இயக்க, இயக்குநர் வி.வி. வினாயக் முதல் காட்சியை இயக்கினார். திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பிரபலங்கள் விழாவில் பங்கேற்று படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

வெகுஜன ரசிகர்களின் ரசனையை நன்கு அறிந்த இயக்குநர் பாபி கொல்லி, இந்த முறை இன்னும் பிரம்மாண்டமான கதையுடன் களமிறங்கியுள்ளார். இப்படத்தில் சிரஞ்சீவி இதுவரை இல்லாத தீவிரமான தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான அவரது உடற்பயிற்சி வீடியோவும் ரசிகர்களிடையே பெரும் கவனம் பெற்றது.

மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, எஸ். தமன் இசையமைக்கிறார். ஆண்டனி ரூபன் படத்தொகுப்பாளராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

#Chiru158 திரைப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நாளை முதல் தொடங்குகிறது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், சிரஞ்சீவியின் அடுத்த மாபெரும் மாஸ் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.