‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்-2’ கதை தயார்: இயக்குநர் பொன்ராம்..
சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் எஸகே நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் நடித்துள்ள ‘கொம்புசீவி’ படம் வருகிற 19-ந்தேதி வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
இச்சூழலில், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ குறித்து பேசியிருக்கிறார் இயக்குநர் பொன்ராம். இது இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது. பொன்ராம் தெரிவிக்கையில், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ 2-ம் பாகத்துக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கான கதையும் தயாராக உள்ளது. சிவகார்த்திகேயனின் வளர்ச்சி உள்ளிட்டவற்றை மனதில் வைத்து கதையில் சில மாற்றங்களை செய்து வருகிறேன். அனைத்தும் தயாரானவுடன், சிவகார்த்திகேயன் ஒப்புக் கொண்டால் அப்படத்தினை தொடங்குவோம்.
அடுத்ததாக முழுக்க காமெடியை முன்னிலைப்படுத்தி படமொன்றை இயக்கி வருகிறேன். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்’ என தெரிவித்துள்ளார்.
பொன்ராம், சிவகார்த்திகேயன் இணைந்து ‘ரஜினிமுருகன்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ‘சீமராஜா’ ஆகிய படங்களில் பணிபுரிந்துள்ளனர். இதில் ‘ரஜினிமுருகன்’ மற்றும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ஆகிய படங்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்றவை என்பது நினைவுகூரத்தக்கது.

