இயக்குநர் சுசி கணேசனின் ‘ஒரண்ட’ படப்பிடிப்பு நிறைவு

Web Ads

இயக்குநர் சுசி கணேசன் பிறந்தநாளான இன்று (ஆகஸ்ட் 25), அவர் இயக்கி வரும் ‘ஒரண்ட’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

படப்பிடிப்பு நிறைவு மற்றும் பிறந்தநாள் என இரட்டை கொண்டாட்டத்தை படக்குழுவினருடன் இணைந்து பிரியாணி சமைத்து கொண்டாடியுள்ளார் சுசி கணேசன்.

இதுகுறித்து பேசிய அவர், “சினிமா பிரபலங்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் சில நேரங்களில் வித்தியாசமான அனுபவமாக அமைந்து விடும். அந்த வகையில், நான் பணியாற்றிய படங்களில் ‘ஒரண்ட’ மட்டுமே என் பிறந்தநாளன்று நிறைவு பெற்றுள்ளது. அதுவும் படப்பிடிப்பு நிறைவு நாளையும் பிறந்தநாளையும் படக்குழுவினருடன் இணைந்து பிரியாணி விருந்து சமைத்து கொண்டாடியது நீண்ட நாட்கள் நினைவில் இருக்கும்,” என தெரிவித்துள்ளார்.

மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள ‘ஒரண்ட’ திரைப்படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

Web Ad 2

கதைக்களம், கதாபாத்திரங்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் குழு என எந்த விவரத்தையும் வெளியிடாமல், ‘ஒரண்ட’ என்ற வித்தியாசமான தலைப்பை மட்டும் அறிவித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுசி கணேசன்.

அன்றாட பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படும் ஒரு வட்டாரச் சொல்லை திரைப்படத் தலைப்பாக வைத்திருப்பது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்கள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.