சென்சார் அதிகாரிகளின் பாராட்டைப் பெற்ற ‘தி டார்க் ஹெவன்’ – செப்டம்பர் 18 முதல் திரையரங்குகளில்!

முழுநீள சஸ்பென்ஸ், க்ரைம், ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
பாலாஜி இயக்கியுள்ள இப்படம், தணிக்கைக்குச் சென்றபோது சென்சார் குழுவினரின் பாராட்டைப் பெற்றுள்ளது. க்ரைம் த்ரில்லர் படமாக இருந்தாலும், எந்தவித வெட்டும் இல்லாமல் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளதாக தணிக்கை குழுவினர் பாராட்டியதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதை தங்களது படத்திற்கான தரச் சான்றிதழாகக் கருதி படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளது.
ஏற்கெனவே ‘D3’ திரைப்படத்தை இயக்கிய பாலாஜி, தனது இரண்டாவது படமாக ‘தி டார்க் ஹெவன்’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிக்பாஸ் புகழ் சித்து, தர்ஷிகா, ரித்விகா ஆகியோருடன் வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்தின் ஒளிப்பதிவை மணிகண்டன் பிகே மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பு பணிகளை ராஜா ஆறுமுகம் கவனிக்க, சக்தி பாலாஜி இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை லாவர்தன் எழுதியுள்ளார்.
கொலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள துப்பறியும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, ராமநாதபுரம், குற்றாலம், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இதுவரை அதிகம் கேமரா சென்றிராத இடங்களையும் தேடிக் கண்டறிந்து படப்பிடிப்பு நடத்தியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
கதையும் திரைக்கதையும் மட்டுமின்றி, ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வடிவமைப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பிக்பாஸ் புகழ் சித்து, கொலை வழக்குகளைத் துப்பறியும் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் புதிய பரிமாணத்தில் நடித்துள்ளார். இந்த வேடம் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அதேபோல், தர்ஷிகா சித்துவின் மனைவியாக வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றொரு பிக்பாஸ் பிரபலமான ரித்விகா, இதுவரை ஏற்று நடிக்காத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், இப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
அனுபவம் வாய்ந்த நடிகர்களான நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி ஆகியோரின் பங்களிப்பும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
படம் தொடங்கும் தருணம் முதல் இறுதி வரை சஸ்பென்ஸ் மற்றும் விறுவிறுப்பு குறையாத வகையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான த்ரில்லர் அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
படத்தின் தரத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, பொறுமையாக செதுக்கி முழுமையான தொழில்நுட்ப நேர்த்தியுடன் படத்தை உருவாக்கியுள்ளதாக இயக்குநர் பாலாஜி தெரிவித்துள்ளார். படத்தைப் பார்த்த திரையுலகப் பிரபலங்களும் இது நம்பிக்கைக்குரிய படமாக உருவாகியுள்ளதாக பாராட்டியுள்ளனர்.
முன்னதாக வெளியாக வேண்டியிருந்த இப்படத்தின் வெளியீடு, ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு மாற்றியமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது செப்டம்பர் 18ஆம் தேதி ‘தி டார்க் ஹெவன்’ திரையரங்குகளில் வெளியாகிறது.
முழுநீள சஸ்பென்ஸ், க்ரைம், ஹாரர் த்ரில்லர் அனுபவத்திற்குத் தயாராகுங்கள்!
