சுந்தர்.சி உடன் பிரிவுக்கு காரணம் என்ன? வடிவேலு மனம் திறந்த பேச்சு
இயக்குனர் சுந்தர்.சி உடன் பணிபுரிவதில் இத்தனை ஆண்டுகள் இடைவெளி ஏற்பட்டதற்கு என்ன காரணம்? என்பது பற்றி வடிவேலு கூறிய தகவல் காண்போம்..
வின்னர், ரெண்டு, கிரி, தலைநகரம் என சுந்தர்.சி-வடிவேலு காம்போ ரசிகர்களை மிகவும் ரசிக்க வைத்தது. இதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர்களின் கூட்டணி ‘கேங்கர்ஸ்’ படத்தில் இணைந்திருக்கிறது. இப்படம் வருகிற 24-ந்தேதி வெளியாகிறது.
இது குறித்து பேசிய வடிவேலு,
‘சுந்தர்சிக்கும் எனக்கும் ஒரு நூலிழை விரிசல்தான். அதை வருகிறவர்கள் போகிறவர்கள் எல்லாம் பெரிதாக்கி விட்டார்கள். கடைசியில் ஒரு மிகப்பெரிய பூகம்பமே வந்து, அந்த விரிசல் சரியாகி நானும் சுந்தரும் ஒன்று சேர்ந்து விட்டோம்.
என்னிடம் ரூபன் என்பவர் ஒரு கதையை கூறிவிட்டு, இந்த கதையில் சுந்தர் சியை வைத்து எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். நானும் ஓகே அப்படியே எடுத்துவிடலாம் என்றேன்.
உடனே அவர் சுந்தர் சியை சந்தித்து பேசினார். நீங்களும் வடிவேலும் இந்த கதையில் நடித்தால், நன்றாக இருக்கும் என்றார். அதன் பிறகு நாங்கள் இருவரும் சந்தித்துப் பேசினோம். அதைத் தொடர்ந்து நீங்களும் நானும் ஒரு படத்தில் முதலில் நடித்து விடுவோம். அதன் பிறகு, அந்த படத்தில் நடிக்கலாம் என்று சொன்னார். அத்துடன் எங்களுக்கு இடையில் இருந்த பிரச்சினை மறைந்து விட்டது. அந்த பிரச்சினை என்ன என்று நாங்கள் யோசிக்கவே இல்லை. நம்மூரில் நான்கு பேர் சேர்ந்து இருந்தால், பலருக்கு பிடிப்பதில்லை.
வில்லத்தனமாக சொல்லாத ஒன்றை இன்னொருவரிடம் சொல்லி, பிளவை ஏற்படுத்துகின்றனர். இப்படி பல ஆண்டுகள் நாங்கள் இருவரும் பிரிந்து இருந்தோம். ஆனால், எங்களுக்கு பெரிதாக அது 14 வருடம் போல போனதே தெரியவில்லை’ என்றார்.
எப்படியோ, பிரிந்தவர்கள் இணைந்தனர். இதனால், கோடைவெயிலில் ரசிகர்கள் குளிர்ச்சியாக சிரிக்க தயாராகி விட்டனர்.