நெப்போலியனும் சரத்குமாரும் என்னை வெறுத்தார்கள்: எம்.எஸ்.பாஸ்கர் சுவாரஸ்ய தகவல்..

1987-ம் ஆண்டு வெளியான ‘திருமதி ஒரு வெகுமதி’ என்ற படத்தில் சிறிய ரோலில் நடித்து அறிமுகமானார் எம்.எஸ்.பாஸ்கர். பிறகு மக்கள் என் பக்கம், காவலன் அவன் கோவலன், அண்ணனுக்கு ஜே, சேலம் விஷ்ணு என பல படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்தார். பின்னர் தொடர்ந்து வாய்ப்புகள் வராததால் டி.வி.சீரியல் பக்கம் கவனத்தை திருப்பினார்.
அவ்வகையில் ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ என்ற சீரியலில் ‘பட்டாபி’ கேரக்டரில் நடித்து பிரபலமானார். பின்னர் ‘செல்வி’ சீரியலில் வில்லன் ரோலை ஏற்றுக் கலக்கியிருந்தார். இடையே சினிமாவிலும் அவ்வப்போது நடித்து வந்த வந்த அவருக்கு ‘டும் டும் டும்’ திரைப்படம் பெரிய அடையாளத்தை கொடுத்தது.
குறிப்பாக, எந்த வட்டார வழக்கையும் மிக எளிதாக பேசிவிடக்கூடியவர். மிகவும் இயல்பாகவும் நுட்பமாகவும் நடிக்கும் ஒரு மகா கலைஞன் எனலாம். இவருக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருக்கிறதே என ரசிகர்களே கருத்து தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
இச்சூழலில் ‘பார்க்கிங்’ படத்தில் நடித்ததற்காக எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக எம்.எஸ். பாஸ்கர் தெரிவிக்கையில், ‘செல்வி’ சீரியலில் நான் ‘ஆண்டவர் லிங்கம்’ கேரக்டரை ஏற்றிருந்தேன். அந்த வில்லன் கதாபாத்திரத்தில் எனது நடிப்பை பார்த்த என் அம்மா எனக்கு சாப்பாடு போடமாட்டேன் என சொல்லிவிட்டார். அதேபோல், என் மகளின் டீச்சர் என்னை அழைத்து, ‘நல்ல கேரக்டரை ஏற்று நடிக்கலாமே’ என கூறினார். இதையெல்லாம் தாண்டி ஒன்று நடந்தது.
அதாவது, ஒருமுறை அந்த சீரியல் சமயத்தில் நெப்போலியனையும், சரத்குமாரையும் சந்தித்தேன். அப்போது அவர்கள் இரண்டு பேருமே, ‘போங்க பாஸ்கர். உங்களை நாங்கள் பட்டாபி கேரக்டரில் எப்படி கொண்டாடினோம். ரசித்தோம். இந்த ஆண்டவர் லிங்கம் கேரக்டரை பார்க்கவே வெறுப்பாக வருகிறது. உங்கள் முகத்தில் விஷம் சொட்டுகிறது. இப்படியெல்லாம் உங்களை யார் நடிக்க சொன்னது என கேட்டார்கள்’ என்றார்.
