பிரபல நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..

சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக, அமலாக்கத்துறை நாடு முழுவதும் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வருகிறது.
அவ்வகையில், தமிழகத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என பல இடங்களில் கடந்த சில வருடங்களாக பல சோதனைகளை மேற்கொண்டுள்ளது. அடுத்ததாக, தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்திலும் சோதனையானது நடத்தப்பட்டது.
அந்த நிறுவனத்தின் இயக்குனர் விசாகனிடம் தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 1000 கோடி ரூபாய் வரை முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த சோதனையின் போது பிரபல தயாரிப்பாளர் ஆகாஷ் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் அவரது வீட்டிற்கு அமலாக்கத்துறை சீல் வைத்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் நீதிமன்றத்தில் உத்தரவின் பேரில் வீட்டிற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது.
இதனிடையே, மீண்டும் அமலாக்கத்துறை தமிழகத்தில் சோதனையை தொடங்கியுள்ளது. அவ்வகையில், சென்னையில் பிரபல நடிகை அருணாவின் வீட்டில் அமலாக்கத்துறை இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகிறது.
இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் உருவான கல்லுக்குள் ஈரம், உட்பட ஏராளமான தமிழ், தெலுங்கு படங்களில் அருணா நடித்துள்ளார். மேலும் தமிழில் சிவப்பு மல்லி, நீதி பிழைத்தது, சட்டம் சிரிக்கிறது, கனலுக்கு கரையேது ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவரது கணவர் மன்மோகன் குப்தா தொழிலதிபராக உள்ளார்.
இந்நிலையில், சட்டவிரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டில் இந்த சோதனையை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகை அருணாவிற்கு வீட்டிற்கு 6 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அருணாவின் வீட்டில் உள்ள சொகுசு கார்கள், அறைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்
மேலும், இந்த சோதனையில் ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத பணம் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா என்பதை அமலாக்கத்துறை இன்றைய சோதனை முடிவில் அறிக்கையாக வெளியிடுவார்கள்

என எதிர்பார்க்கப்படுகிறது.