ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் பாடல்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ‘ஆரா 10/10’, ‘பப்பாளி பழமே’, ‘கோயிந்தம்மா’, ‘அடி போடி’ ஆகிய பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், தற்போது படத்தின் 5வது சிங்கிளான ‘கலைவாணியே’ பாடல் வெளியாகியுள்ளது.
கௌஷிக் கிருஷ்ணா, டி. சத்யபிரகாஷ் மற்றும் ஹிப்ஹாப் தமிழா இணைந்து பாடியுள்ள இப்பாடலுக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி வரிகள் எழுதியுள்ளார். காதல், திருமணம் மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘கலைவாணியே’, படத்தின் கதையோட்டத்தில் முக்கியத்துவம் பெறும் பாடலாக அமைந்துள்ளது.
குறிப்பாக, இப்பாடலில் ஹிப்ஹாப் தமிழா ஆதி மற்றும் ரம்யா ரங்கநாதன் கதாபாத்திரங்களின் திருமண நிகழ்வு அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. காதலின் அடுத்தகட்டமான திருமணத்தை மையமாகக் கொண்ட இந்தப் பாடல், காதல் மற்றும் குடும்ப உணர்வுகளை ஒருசேர ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் உருவாகியுள்ளது.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகியுள்ள ‘மீசைய முறுக்கு 2’, இன்றைய தலைமுறையினரின் ரசனைக்கு ஏற்ற வகையில் காதல், நட்பு, நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் உற்சாகமான இசை என பல்வேறு அம்சங்களுடன் உருவாகியுள்ளது.
- Advertisement -
‘மீசைய முறுக்கு’ திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அதன் தொடர்ச்சியான ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் வெளியீட்டுத் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இப்படம் வரும் செப்டம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஹிப்ஹாப் தமிழா ஆதி இப்படத்தில் கதை, திரைக்கதை, இயக்கம், இசை மற்றும் நடிப்பு என பல்வேறு பொறுப்புகளை ஏற்றுள்ளார். அவருடன் சைத்ரா ஜே. ஆச்சார், கெட்டிகா சர்மா மற்றும் ரம்யா ரங்கநாதன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஹர்ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன் மற்றும் ஷா ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முதல் பாகத்தின் இசை இளைய தலைமுறையினர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் பாடல்களும் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகின்றன. தற்போது வெளியாகியுள்ள ‘கலைவாணியே’ பாடல், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
‘மீசைய முறுக்கு 2’ – செப்டம்பர் 25 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில்!