சல்மான்கானால் சோதனைக்கு ஆளான ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயனை இயக்குவதிலும் சிக்கல்..
ஆண்டி முதல் அரசன் வரைக்கும் சோதனைக்காலம் நிகழ்வது இயல்பானது. அவரவர் வாழ்வியலுக்கேற்ப காட்சிகள் மாறியிருக்கும் அவ்வளவே.
அதுபோல, தற்போது இயக்குனர் ஏ.ஆர். முருகதாசுக்கு ஏற்பட்டிருக்கும் சோதனைக்காலம் என்று தீரும். வாங்க.. விஷயத்திற்கு வருவோம்..
தீனா, ரமணா, கஜினி போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக மாறியவர் ஏ.ஆர். முருகதாஸ். இவர், தொடர்ந்து ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்கார், தர்பார் என அடுத்தடுத்து படங்களை இயக்கியதோடு, டோலிவுட், பாலிவுட்டிலும் அழுத்தமாய் திரைச்சுவடு பதித்தார்.
தற்போது பாலிவுட் ஸ்டார் சால்மான் கானை வைத்து, சிக்கந்தர் என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், சல்மான்கான் பெரும் மனக்கவலையில் இருக்கிறார்.
அதாவது, சல்மானின் நெருங்கிய நண்பரும், மகராஷ்டிர முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னாய் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
1998-ம் ஆண்டு படப்பிடிப்பின் போது அபூ,ர்வ வகை பிளாக்பக் மான்களை வேட்டை ஆடிய வழக்கில் பகை உள்ளது.
இந்தியாவை பொறுத்தவரையில், மானை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம். இதற்காக சல்மான் கானுக்கு 2018 ஆம் 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், சல்மான்கான் சிறைக்கு செல்லாமல் தப்பித்துவிட்டார்.
இந்த அரிய வகை மான் பிஷ்னாய் என்ற ஒரு இன மக்கள் கடவுளாக பாவித்து வருகின்றனர். இதனால், அந்த கும்பலின் தலைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மன்னிப்பு கேட்கவில்லை என்றால், கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால், சல்மான் எங்கு சென்றாலும் குண்டு துளைக்காத காரில், பவுன்சர்கள் புடை சூழவே வருகிறார்.
இந்த சூழ்நிலையில், ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பை நடத்துவது சரியாக இருக்காது என்பதால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ஏ.ஆர் முருகதாஸ் சென்னை திரும்பியுள்ளார்.
இந்த படத்தை முடித்துவிட்டு, சிவகார்த்திகேயன் படத்தை இயக்க இருந்தார். இதற்காக, சிவகார்த்திகேயன் அமரன் படத்தை முடித்துவிட்டு, முருகதாசுக்காக காத்திருக்கிறார். சிவகார்த்திகேயன் கொடுத்த கால்ஷீட் எல்லாம் வீணாகி வருவதாக சொல்லப்படுகிறது.
தர்பார் படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸின் எந்த படமும் வெளியாகாத நிலையில், அடுத்த ஒரு வெற்றிப்படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என் சூழ்நிலையில் இருக்கும் முருகதாசுக்கு இது ஒரு சோதனை காலமாகவே மாறியுள்ளது.
மேலும், சிவகார்த்திகேயன் படத்தை முடித்துவிட்டு, முருகதாஸ் கேரியரில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்றான கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தை இந்தியில் இயக்க உள்ளார். அதற்கான பேச்சு வார்த்தை அமீர்கான் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் இடையே நடந்து முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
முருகதாஸ் படங்களைப் போலவே, ரியலிலும் சஸ்பென்ஸ், த்ரிலிங் நிகழ்வுகள் சோதனையாகவே வருகின்றன போலும். காலம் மாறும்; காட்சியும் தானே.!
