திருக்கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி, பாடகர் வேல்முருகன் நியமனம்!

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பராமரிக்கப்படும் திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமிப்பதற்கான தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்து, பெயர்ப்பட்டியலை தயாரிக்கும் குழுவில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க் நிர்வாக இயக்குநர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் பிரபல பாடகர் வேல்முருகன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு அர்ச்சனா கல்பாத்தி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த நியமனத்தை முக்கியமான பொறுப்பாக கருதுவதாகவும், தமிழ்நாட்டின் திருக்கோயில்கள் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டின் முக்கிய அடையாளங்கள் என்பதால், அவற்றின் சிறப்புக்கு பங்களிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் பொறுப்பை நேர்மையுடனும் முழு அர்ப்பணிப்புடனும் நிறைவேற்றுவேன் எனவும் கூறியுள்ளார்.

திரைப்பட தயாரிப்பு, விநியோகம் மற்றும் திரையரங்குத் துறையில் கடந்த 16 ஆண்டுகளாக ஏஜிஎஸ் குழுமத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வரும் அர்ச்சனா கல்பாத்தி, ஆன்மிகத்தில் ஆர்வம் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேபோல், திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமிப்பதற்கான தேர்வுக் குழுவில் பிரபல பாடகர் வேல்முருகனும் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வேல்முருகன் கூறுகையில், இந்தப் பொறுப்பை ஒரு பதவியாக கருதாமல், இறைவனுக்கு செய்யும் பணியாக நினைத்து செயல்படுவேன் என தெரிவித்துள்ளார். திருக்கோயில்களில் பாடி வரும் தனக்கு இத்தகைய பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதற்காக இறைவனுக்கும் அரசுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
