‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜின் ‘SYG’ படப்பிடிப்பு நிறைவு!

‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிப்பில், அறிமுக இயக்குநர் ரோஹித் கே.பி. இயக்கத்தில் உருவாகி வரும் பான் இந்தியா திரைப்படம் ‘சம்பராலா ஏடி கட்டு – SYG’. பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.
படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது படக்குழுவினர் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்படம் 2027-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டரில் சாய் துர்கா தேஜ் ரத்தக் காயங்களுடன் கையில் ஆயுதம் ஏந்தியபடி, தீப்பிழம்புகள் சூழ்ந்த பின்னணியில் ஆக்ரோஷமான தோற்றத்தில் இடம்பெற்றுள்ளார். எரியும் கட்டிடங்கள், புகை மற்றும் பரபரப்பான சூழல் ஆகியவை படத்தின் அதிரடி ஆக்ஷன் உலகத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன.
‘அசுர ஆகமனம்’ என்ற முன்னோட்டக் காட்சி மற்றும் இதுவரை வெளியான போஸ்டர்களுக்கு கிடைத்த வரவேற்பால் படம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரம்மாண்டமான அரங்குகள் மற்றும் பெரிய அளவிலான ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படம், திரையரங்கில் ஒரு பிரம்மாண்டமான அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

சாய் துர்கா தேஜ் இதுவரை ஏற்றிராத வகையில் சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அவருடன் ஐஸ்வர்யா லட்சுமி, ஜகபதி பாபு, சாய்குமார், ஸ்ரீகாந்த், அனன்யா நாகள்ளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஒருவர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்ய, பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். நவின் விஜய் கிருஷ்ணா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். காந்தி நதிக்குடிகர் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். பீட்டர் ஹெய்ன், ராம் லக்ஷ்மன், சேத்தன் மற்றும் ப்ருத்வி ஆகியோர் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.
சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு 2027 ஜனவரி 12-ம் தேதி வெளியாக உள்ளதால், ‘SYG’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
