கால்நூற்றாண்டு கால சக்ஸஸ் ஃபார்முலா என்ன?: இயக்குனர் சுந்தர்.சி விளக்கம்

தமிழ்சினிமாவில், சுமார் 25 ஆண்டுகாலமாக வெற்றியுலா வருபவர் சுந்தர்.சி. இவர் சாதனையின் இலக்கணம் பற்றிப் பார்ப்போம்..

‘உள்ளத்தை அள்ளித்தா’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, ரஜினி நடிப்பில் அருணாச்சலம், கமல் நடிப்பில் அன்பே சிவம் போன்ற படங்களையும் இயக்கி கவனம் ஈர்த்தார். பின்னர், கிரி, வின்னர், தலைநகரம் என மாஸ் காமெடி படங்களையும் வடிவேலு கூட்டணியில் கொடுத்தவர் சுந்தர்.சி. தற்போது இவர்கள், நீண்ட இடைவெளிக்கு பிறகு கலக்க வரும் படம் ‘கேங்கர்ஸ்’. இப்படம் வரும் 24-ந்தேதி ரிலீஸாகிறது.

இந்நிலையில், நயன்தாரா நடிப்பில் ‘பொட்டு அம்மன்-2’ படத்தையும் பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். இச்சூழலில், தனது திரைப்படங்களின் வெற்றிக்கான ஃபார்முலா என்ன என்பது குறித்து அவர் தெரிவிக்கையில்,

‘என்னுடைய படங்களுக்கு அதிகமாக வரும் பார்வையாளர்கள் யாரென்று பார்த்தால் குழந்தைகளும், ஃபேமிலி ஆடியன்ஸும்தான். எனவே அவர்கள் ரசிக்கும்படிதான் நான் காட்சிகள் வைப்பேன்.

மிகவும் ஆபாசமான காட்சிகள், என் படங்களில் இருக்காது. டபுள் மீனிங் வசனங்களை என் படங்களில் நான் வைப்பதில்லை. ஒருவேளை அப்படி டபுள் மீனிங் இருந்தால், அது பார்ப்பவர்களுக்கு அப்படி தெரிந்திருக்கலாம். நான் அந்த எண்ணத்தில் வைத்திருக்க மாட்டேன். காரணம், எழுதும்போதே டபுள் மீனிங் வசனங்களை நான் தவிர்த்து விடுவேன். அதேபோல ஆபாச வசனங்களும் இருக்காது.

என் படங்களில் கிளாமர் இருக்கும். நாம் வைக்கும் ஆங்கிள் தான் முக்கியம். புடவை கட்டிக் கொண்டு வந்தால் கூட டாப் ஆங்கிள் வைத்தால் தப்பாகி விடும். ஹீரோயின் கவுன் போட்டுக் கொண்டு வரும்போது லோ ஆங்கிள் வைத்தால் அதுதான் ஆபாசம்.

ஆனால், அதை என் படங்களில் எப்போதுமே செய்வதில்லை. முடிந்த அளவுக்கு, நான் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் அளவுக்கு அழகாக ஷூட் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவேன்.

என் படங்களில் அருவருப்பான சமூக மோதல்களோ, பாலியல் வன்கொடுமை காட்சிகளோ, ஸ்பெஷல் ஐட்டம் பாடல்களோ நான் வைத்ததில்லை. என் குடும்பத்தோடு உட்கார்ந்து நான் ஜாலியாக படம் பார்க்க வேண்டும்’ என்றார்.

மெகா சாதனைதான்; சினிமாத்துறையில், இயக்குனராகவும் நடிகராகவும் கால் நூற்றாண்டு காலம் நிலைத்து நிற்பவர் அல்லவா சுந்தர்ஜி.!

director sundar c movies success formula
director sundar c movies success formula