தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால், நீதிமன்றத்தை நாட ஜனநாயகன் படக்குழு முடிவு..
விஜய் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்கைக்கு அனுப்பியது படக்குழு. ஆனால், இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால், படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 19-ம் தேதி படத்தை பார்த்த தணிக்கைக்குழு சில காட்சிகளை நீக்கக் கூறியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, படக்குழு அந்த காட்சிகளை நீக்கி மறு தணிக்கைக்கு அனுப்பியது. ‘ஜனநாயகன்’ வரும் 9-ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால், படக்குழு நீதிமன்றத்தை நாட ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள இந்த இழுபறியால், திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், அரசியல் உள்நோக்கத்தோடு படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கத் தடை ஏற்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
