20 ஆண்டுகளுக்கு பிறகு, எஸ்.ஜே.சூர்யா-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி..

எஸ்.ஜே.சூர்யா இயக்கிய வாலி, குஷி ஆகிய படங்களுக்கு தேவா இசையமைத்திருந்தார்.
தற்போது நடிகராகவும் வலம் வரும் எஸ்.ஜே.சூர்யா ’இசை’ படத்துக்குப் பிறகு சுமார் 10 ஆண்டுகள் கழித்து ‘கில்லர்’ என்னும் படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தை கோகுலம் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது. இதன் இசையமைப்பாளர் யார் என்பதை படக்குழு அறிவிக்காமல் இருந்தது. தற்போது ‘கில்லர்’ படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
முன்னதாக, எஸ்.ஜே.சூர்யா-ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் இணைந்து ‘நியூ’ மற்றும் ‘அன்பே ஆருயிரே’ ஆகிய படங்களில் பணிபுரிந்துள்ளனர். சுமார் 20 ஆண்டுகள் கழித்து இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரிய இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ப்ரீத்தி அஸ்ரானி நாயகியாக நடித்து வருகிறார். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. காதல் கலந்த ஆக்ஷன் படமாக பெரும் பொருட்செலவில் இப்படம் உருவாக இருக்கிறது. இதற்காகவே பிரம்மாண்ட ஸ்போட்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.
