இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கும் கார்த்தி!

‘சிங்கம் 2’, ‘சர்தார்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் மோகன் ராஜா முதன்முறையாக இணையும் புதிய பிரம்மாண்ட திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
குடும்பம், உணர்வுகள் மற்றும் வீரத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையிலான முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகவுள்ளது. கார்த்தியின் அனைவராலும் விரும்பப்படும் நடிப்பு பரிமாணத்தை மீண்டும் திரையில் கொண்டுவரும் முயற்சியாகவும் இப்படம் பார்க்கப்படுகிறது.

‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘வேலாயுதம்’, ‘தனி ஒருவன்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய மோகன் ராஜா, திரையுலகில் தனது 25-ஆவது ஆண்டை கொண்டாடும் நிலையில் இந்த புதிய படத்தை அறிவித்துள்ளார். அவரது முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ள இந்த கூட்டணி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எஸ். லக்ஷ்மன் குமார் தயாரிக்கும் இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் வலுவான தொழில்நுட்பக் குழு இணைகின்றனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், நடிகர்கள், தொழில்நுட்பக் குழு மற்றும் வெளியீட்டு தேதி உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் வாரங்களில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட அறிவிப்பை வெளியிட்ட பிரின்ஸ் பிக்சர்ஸ், “ஒரு புதிய பயணம் தொடங்குகிறது” என்ற வாசகத்துடன் இந்த மெகா கூட்டணியை அறிமுகப்படுத்தியுள்ளது.