விக்ரம் நடிக்கும் அடுத்த பட இயக்குநர் யார்?

‘வீர தீர சூரன்’ படம் வெளியாகி வரவேற்பு பெற்றாலும், விக்ரமின் அடுத்த பட படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது.

மடோன் அஸ்வின் மற்றும் பிரேம்குமார் இருவருடைய படங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. இரண்டு இயக்குநர்களுமே வேறொரு நாயகனை வைத்து படங்கள் இயக்கவுள்ளார்கள். இதனால், விக்ரமின் அடுத்த பட இயக்குநர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது.

தற்போது ‘ராட்சசன்’ பட இயக்குநர் ராம்குமார் விக்ரமை சந்தித்து கதையொன்று கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தினை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது விஷ்ணு விஷால் நடிக்கும் ‘இரண்டு வானம்’ என்ற படத்தினை இயக்கியுள்ளார். இதன் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை முடித்துவிட்டு விக்ரம் படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது. விக்ரம்-ராம்குமார் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமாரும் விக்ரமுக்கு கதை கூறியிருப்பதாக தெரிகிறது. இரண்டு ராம்குமாரில் விக்ரமின் அடுத்த இயக்குநர் யார் என்பது தான் இப்போதைய கேள்வியாக எழுந்துள்ளது. ‘பார்க்கிங்’ ராம்குமார் சிம்பு படத்தை இயக்கவுள்ளதாகவும், ஆனால், சிம்பு வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்து நடிக்கவுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

இதற்கிடையே கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படமும் எப்போது வெளியாகும் என்பது அறிவிக்கப்படாமல் உள்ளது.

vikram next film is reportedly being directed by ramkumar

 

Actor Vikramfansstoryசீயான் விக்ரம்வீர தீர சூரன்