ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து அவர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி நடித்து வெளியான ‘கேம் சேஞ்சர்’ படமும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் ‘இந்தியன் 3’ படத்தின் 70 சதவிகித காட்சிகள் முடிவடைந்து விட்ட நிலையில் அதன் படப்பிடிப்பு தொடரவில்லை.
இதற்கிடையே, சு.வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ நாவலின் உரிமையை வாங்கியுள்ள ஷங்கர், அதற்கான திரைக்கதையை ஏற்கனவே எழுதி வைத்துள்ளார். இப்படத்தை 3 பாகமாக இயக்க இருப்பதாக தெரிவித்திருந்தார். இப்போது அதற்கான வேலைகளை ஷங்கர் தொடங்கி இருக்கிறார்.
மும்பையை சேர்ந்த பென் மீடியா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் விக்ரம், ரன்வீர் சிங் இருவரும் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘அந்நியன்’ படத்தின் இந்தி ரீமேக்கில் ரன்வீர் சிங் நடிக்க இருந்தார். அந்தப் படம் தொடங்கப்படவில்லை. இதற்கிடையே அவர் இதில் நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் விஜய்யை ஷங்கர் சந்தித்தார். கடைசிப்படமாக ‘வேள்பாரி’ படத்தில் நடிக்கக் கோரியதாக தகவல் வெளியானது நினைவுகூரத்தக்கது.