அசோக் செல்வன் நடிப்பில், ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் முதல் பாடலான “ஆசை வரமே” வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
கோவிந்த் வஸந்தா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்பாடலை சின்மயி மற்றும் கோவிந்த் வஸந்தா இணைந்து பாடியுள்ளனர். மெட்ராஷீ பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
“நேர நதி தீரும் வரை, நீல அலை ஓயும் வரை” என தொடங்கும் இந்த மெலடி பாடல், இளம் காதலர்களின் அன்பு, நெருக்கம், ஊடல் மற்றும் செல்லச் சண்டைகளை அழகாக பிரதிபலிக்கிறது. கோவிந்த் வஸந்தாவின் மென்மையான இசையும், சின்மயி மற்றும் அவரது குரல்களும் பாடலுக்கு கூடுதல் சிறப்பு சேர்த்துள்ளன.
இப்படத்தில் அசோக் செல்வனுடன் ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘போர்த்தொழில்’ படப்புகழ் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதையை எழுதியுள்ளார்.
கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ஆர்.கே. செல்வா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை கவனிக்கிறார்.
ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் இணைந்து தயாரிக்கும் இப்படம், அழகான காதல் கதையுடன் பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்டதாக உருவாகி வருகிறது.
‘அன்பில் அவன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு திட்டமிட்டுள்ளது. தற்போது “ஆசை வரமே” பாடலுக்கு கிடைத்து வரும் வரவேற்பு, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.