தமிழ் சினிமாவில் அதிரடி இயக்குநராக கவனம் ஈர்த்திருப்பவர் லோகேஷ் கனகராஷ் என்பது தெரிந்ததே. இவரது இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆயினும் ரஜினிக்காகவே இப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளது.
இதையடுத்து லோகேஷ் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். அதன் பிறகு கார்த்தி நடிப்பில் ‘கைதி 2’ படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே அவர் அமீர்கான் நடிப்பில் சூப்பர் ஹீரோ கதையை இயக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இதை அமிர்கானும் லோகேஷும் உறுதி செய்திருந்தனர். இது நடிகர் சூர்யாவுக்குச் சொல்லப்பட்ட ‘இரும்புக்கை மாயாவி’ கதை எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இந்தப் படம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பாலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன. முழு ஸ்கிரிப்டையும் முதலில் முடித்துவிட்டு, சில மாதங்களுக்குப் பிறகுதான் படப்பிடிப்புக்கு செல்லவேண்டும் என்ற அமீர்கான் கூறியதாகவும், இது தொடர்பாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, எதிர்காலத்தில் சேர்ந்து பயணிக்கலாம் என்ற எண்ணத்துடன் இருவரும் சுமூகமாகப் பிரிந்துள்ளனர். இதனால் இந்த சூப்பர் ஹீரோ படம் இப்போது இல்லை என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.