வன்கொடுமைகளை கண்டு, வேதனைக்கு ஆளாகிறேன்: விஜய் கைப்பட எழுதிய கடிதம்..
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து, விஜய் கைப்பட எழுதியுள்ள கடிதம் வருமாறு:
தற்போது விஜய், ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது 69-வது படத்தில் நடித்து வருகிறார். அதில், பூஜா ஹெக்டே ஹீரோயினாகவும், பாபி தியோல் வில்லனாகவும் நடிக்கின்றனர்.
இப்படத்தை முடித்துவிட்டு, முழுநேர அரசியல் பணிகளில் விஜய் இறங்குகிறார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க இருக்கிறார். இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில்..
‘அன்பு தங்கைகளே கல்வி வளாகம் முதற்கொண்டு ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், எனதருமை தங்கைகள், குழந்தைகள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளை கண்டு உங்கள் அண்ணனாக மன அழுத்தத்துக்கும் சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன்.
யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்த பயனுமில்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இந்தக் கடிதம். எல்லா சூழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன். அண்ணனாகவும் அரணாகவும்.
எனவே, எதை பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழ்நாட்டை படைத்தே தீருவோம். அதற்கான உத்தரவாதத்தை நாம் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்’என்றார்.