முதல்வர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் ஆகும் ‘மெர்சல்’!

Web Ads

தமிழக முதல்வர் விஜய் மூன்று வேடங்களில் நடித்துப் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘மெர்சல்’ திரைப்படம், ஜூன் 19ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 2017ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்த இந்தப் படம், வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றியைப் பெற்றது.

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு விஜய் கொண்டாடும் முதல் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்களுக்கான சிறப்பு கொண்டாட்டமாக ‘மெர்சல்’ ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. ஜூன் 22ஆம் தேதி விஜயின் பிறந்தநாள் வருவதையொட்டி, ஜூன் 19ஆம் தேதி இந்த சிறப்பு வெளியீடு நடைபெறுகிறது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய City Chenglepet பகுதியில் சுமார் 100 திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளது. இந்த வெளியீட்டை KP Films சார்பில் கென்னடி மேற்கொள்கிறார். ஏற்கனவே பல திரைப்படங்களை வெற்றிகரமாக வெளியிட்டுள்ள அவர், தற்போது KP Priyanga Productions நிறுவனத்தின் மூலம் ‘மெர்சல்’ படத்தை மீண்டும் ரசிகர்களிடம் கொண்டு வருகிறார்.

இயக்குநர் அட்லீ இயக்கிய இந்தப் படத்தில் விஜயுடன் காஜல் அகர்வால், நித்யா மேனன், சமந்தா மற்றும் எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படம், அதன் பாடல்கள், வசனங்கள் மற்றும் சமூக கருத்துக்களால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படைப்பாக 2017ஆம் ஆண்டு வெளியான ‘மெர்சல்’, விஜயின் திரைப்பயணத்தில் முக்கியமான படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தற்போது மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்தப் படம், விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய திரை விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.