கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள தகவல் காண்போம்..
தமிழ் சினிமாவில், ‘பொன் மாலைப் பொழுது’ என்ற பாடலின் மூலமாக அறிமுகமானவர் கவிஞர் வைரமுத்து. முன்னதாக ‘வைகறை மேகங்கள்’ என்ற நூலெழுதி, கவியரசு கண்ணதாசனால் பாராட்டு பெற்றவர். இந்நிலையில், தற்போது வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,
‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ அச்சுப்பணி நிறைந்துவிட்டது. எனது நாற்பதாம் நூல் இது. இதன் முன்னுரையை நான் முனைந்து எழுதியிருக்கிறேன். 13 பக்கங்களில் இயங்குகிறது எனது நீண்ட முன்னுரை.
வள்ளுவர் காற்றைப்போல் பொதுவானவர். காற்றில் யாரும் சாயமடிக்க முடியாது. எந்தப் பழைமைவாதமும் காற்றைப் பூட்டிவைக்க இயலாது.
மறைக்க முடியாத சான்றுகளும், மறுக்க முடியாத தரவுகளும் மொய்த்துக் கிடக்கின்றன, முன்னுரையில். வள்ளுவம் உலகப் பொதுமறை என்று உலகத் தமிழர்கள் உரக்கச் சொல்வதற்கு, எனது முன்னுரையே வாளுமாகும். கேடயமுமாகும்’ என குறிப்பிட்டுள்ளார்.
‘வள்ளுவர் மறை – வைரமுத்து உரை’ நூல், வருகிற ஜூலை 13-ந்தேதி வெளியிடப்படுகிறது. திருக்குறளுக்கு உரை எழுதிய 23-வது தமிழ் உரை ஆசிரியர் வைரமுத்து என்பது குறிப்பிடத்தக்கது.