ஜனநாயகன் படத்திற்கு நேர்ந்த ரிலீஸ் விவகாரம்போல, பராசக்தி படத்திற்கு வந்துவிடுமோ என எண்ணப்பட்டது. இந்நிலையில் இப்படத்திற்கு சென்சார் போர்டு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீ லீலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படத்தை, டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார்.
இப்படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் பல்வேறு காட்சிகளை நீக்கச் சொல்லி அறிவுறுத்தினர். 1960-களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி ‘பராசக்தி’ உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தான் தணிக்கை அதிகாரிகள் பல்வேறு காட்சிகளை நீக்கச் சொல்லியிருந்தனர். இந்நிலையில், படக்குழு மறுதணிக்கைக்கு விண்ணப்பித்தது.
இதனைத் தொடர்ந்து இப்படத்துக்கு தற்போது U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி நாளை 10-ந்தேதி படம் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டான் பிக்சர்ஸ் சார்பில் பகிரப்பட்ட ட்வீட்டில், பராசக்தி’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் நாளை ரிலீஸ் ஆகிறது’ என கூறப்பட்டுள்ளது.