நடிகர்கள் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் நடித்துள்ள ‘என்ன விலை’ திரைப்படம், வெளியீட்டிற்கு முன்பே பெருமைக்குரிய தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை வென்று கவனம் ஈர்த்துள்ளது.
விருதுகளுக்கும் அங்கீகாரத்திற்கும் இடையிலான இடைவெளியை குறைக்கும் படைப்புகள் மிக அரிது. குறிப்பாக ‘சிறந்த திரைக்கதை’ போன்ற விருதுகள், ஒரு படத்தின் திரையரங்க அனுபவம் எவ்வளவு வலுவாக இருக்கும் என்பதற்கான அடையாளமாக பார்க்கப்படுகின்றன.
கலாமயா பிலிம்ஸ் கிதேஷ் வி வழங்கும் இப்படத்தை இயக்கியுள்ளார் சஜீவ் பழூர். ‘என்ன விலை’ திரைப்படம் அதன் வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. தற்போது கிடைத்துள்ள இந்த விருது, படத்தின் கதை சொல்லலும் திரைக்கதையும் வலிமையானவை என்பதைக் காட்டுகிறது.
சமூக-அரசியல் பின்னணியுடன் கூடிய குடும்பத் திரில்லராக உருவாகியுள்ள இப்படம், உணர்வுப்பூர்வமான தருணங்களும் சுவாரஸ்யமான திருப்பங்களும் இணைந்த முழுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விருது படக்குழுவிற்கு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தயாரிப்பாளர் கிதேஷ் வி கூறுகையில், “இந்த சர்வதேச விழாவில் சிறந்த திரைக்கதை விருது கிடைத்தது எங்களுக்கு பெருமை. இது எங்கள் குழுவின் உழைப்பிற்கான அங்கீகாரம். ‘என்ன விலை’ திரையரங்கிற்காக உருவாக்கப்பட்ட படம். அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. ரசிகர்கள் திரையரங்கில் பார்த்து ரசிப்பார்கள் என நம்புகிறோம்” என்றார்.
இயக்குநர் சஜீவ் பழூர் கூறுகையில், “யதார்த்தமான களத்திலிருந்து வந்த கதையாக ‘என்ன விலை’ உருவாகியுள்ளது. இந்த திரைக்கதைக்கு கிடைத்த அங்கீகாரம் மகிழ்ச்சி அளிக்கிறது. விருதிற்காக அல்லாமல், ஆழமான அனுபவத்தை தரும் வகையில் இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். பெரிய திரையில் இதன் உணர்வை பார்வையாளர்கள் நிச்சயம் உணர்வார்கள்” என்றார்.
இந்தப் படத்தில் ஒய்.ஜி. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன் ராம், லொள்ளு சபா சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணா, தீபா சங்கர், மொட்டை ராஜேந்திரன், நக்கலைட்ஸ் கவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராமேஸ்வரம், சென்னை, புதுச்சேரி, கொச்சி உள்ளிட்ட 56 இடங்களில் பல கட்டங்களாக படமாக்கப்பட்டுள்ள ‘என்ன விலை’, தற்போது இறுதி பணிகளில் உள்ளது. வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
வெளியீட்டிற்கு முன்பே சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ள இந்த படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.