சொத்து ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்: ரவிமோகனுக்கு கோர்ட் உத்தரவு

ரவி மோகன் நடிப்பில் தற்போது பராசக்தி, கராத்தே பாபு, ஜீனி போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதனிடையே, கோவையை சேர்ந்த பாபி டச் கோல்டு யூனிவர்சல் நிறுவனம் தாங்கள் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க, ரவிமோகனை ஒப்பந்தம் செய்திருந்தது. இதற்காக, 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 80 நாட்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் ரவி மோகன்.

தான் கால்ஷீட் ஒதுக்கியபோதும் படப்பிடிப்பை தொடங்காததால், தன்னால் வேறு படங்களில் நடிக்க முடியவில்லை. தான் கொடுத்த கால்ஷீட் ஒப்பந்தம் காலாவதியாகி விட்டதால், படத்தில் இருந்து ரவிமோகன் விலகியதாக கூறப்படுகிறது.

இதனால், படத்தில் நடிப்பதற்காக வாங்கிய 6 கோடி ரூபாய் அட்வான்ஸை திருப்பித் தர மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால், அந்த 6 கோடி ரூபாயை திருப்பித் தர உத்தரவிடக்கோரி, ரவி மோகனுக்கு எதிராக பாபி டச் கோல்டு நிறுவனம் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தது.

அதேபோல், கொடுத்த கால்ஷீட்டில் படத்தை தயாரிக்காமல் இழுத்தடித்ததால், தனக்கு 9 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க பாபி கோல்ட் டச் நிறுவனம் மீது ரவிமோகன் தரப்பில், மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த இரண்டு வழக்குகளும் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கின் மூலமாக எதிர்மறையான விளம்பரம் தான் ஏற்படும் என்றும், அதற்கு பதிலாக பணத்தை திருப்பி கொடுத்துவிடலாம் என ரவி மோகன் தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ரவி மோகன் தரப்பு வழக்கறிஞர் கார்த்திகை பாலன் வழக்கில் தங்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்க விரும்புவதாக கூறினார்.

மேலும், அடுத்த படத்தில் நடிக்கும்போது பணத்தை திருப்பி கொடுத்துவிடுவதாக கூறியதை, தயாரிப்பு நிறுவனம் ஏற்கவில்லை எனவும், கொடுத்த கால்ஷீட்டையும் பயன்படுத்தவில்லை என கூறினார்.

தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ரவி மோகன் தனது மனைவி உடனான பிரச்சினையின்போது வாடகை வீட்டில் வசித்து வருவதாக கூறிய ரவி மோகன், தற்போது சொந்த படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். தங்கள் நிறுவனம் அளித்த முன்பணத்தை கொண்டு, ரவிமோகன் சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, இருதரப்பு பிரச்சினையை பேசி தீர்ப்பதற்காக மத்தியஸ்தரை நியமிப்பதாக தெரிவித்த நீதிபதி, 9 கோடி இழப்பீடு கேட்டு ரவிமோகன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், 5.90 கோடி ரூபாய் சொத்து உத்தரவாதத்தை ரவி மோகன் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, இதுதொடர்பாக நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தார்.

highcourt order ravi mohan to submit assets details
actor ravimohaninvestigationparasakthi movieநீதிமன்றம்ரவி மோகன்