இயக்குநரும், நடிகருமான பார்த்திபன், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;
‘தற்போதைய அரசியல் சூழலில் நிறைய வசதியும், பணமும் தேவைப்படுகிறது. மனதில் வீராப்பும், நல்ல எண்ணமும் இருந்தால் கூட, அதை மட்டும் வைத்துக் கொண்டு இங்கு அரசியல் செய்துவிட முடியாது. அரசியல் என்பது வேறொரு மிகப்பெரிய களம். புதிதாக யார் வந்தாலும் அவர்களை நான் வரவேற்கிறேன்
யாரோ ஒருவர் மட்டும் ஓடிச்சென்று பதக்கம் வாங்குவதற்கு பதிலாக, ஒரு பெரிய கூட்டமே வெற்றிக்காக ஓடும்போதுதான் சுவாரஸ்யம் அதிகமாக இருக்கும். நான் ஆளுங்கட்சிக்கு எதிரானவன் கிடையாது. இங்கு போட்டி பயங்கரமாக இருந்தால்தான் வெற்றி நியாயமானதாக இருக்கும் என்பது எனது கருத்து.
கரூரில் நிகழ்ந்த சம்பவத்தைப்போல் இனி எங்கும் நடக்காமல் இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் யோசிக்க வேண்டும்’ என்றார். தற்போது பார்த்திபன் ‘நான் தான் சிஎம்’ என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.