கடந்தாண்டு இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க தனுஷ் கமிட்டாகியிருந்தார். அப்படத்தை அருண் மாதீஸ்வரன் இயக்குவதாக அறிவிப்பு வந்தது. இப்படத்தின் அறிவிப்பை கமல் மற்றும் பாரதிராஜா முன்னிலையில் படக்குழு வெளியிட்டது.
அறிவிப்பு வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் ஆனபோதும் இப்படம் குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. மும்பை தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இளையராஜா பயோபிக் துவங்காமல் இருப்பதாக சில செய்திகள் வந்தன.
மேலும், இளையராஜா பயோபிக்கை தயாரிப்பதற்காக வேறு தயாரிப்பாளர்களை தனுஷ் தேடி வருவதாக சொல்லப்பட்டது. ஆனால், அதன் பிறகு தற்போதுவரை இளையராஜா பயோபிக் பற்றி எந்த ஒரு பேச்சும் இல்லை.
இப்படத்தை இயக்குவதாக இருந்த அருண் மாதீஸ்வரன், லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் ‘டிசி’ என்ற படத்தை தற்போது இயக்கி வருகின்றார். அதுபோல், மறுபக்கம் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்து வருகிறார். மேலும் அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி மற்றும் மாரி செல்வராஜ் படம் என தனுஷ் பிசியாக இருக்கின்றார்.
அவ்வகையில், அடுத்த இரண்டு வருடங்களுக்கு தனுஷால் புது படங்கள் எதிலும் கமிட்டாக முடியாது என்றே தெரிகிறது. இதனால், இளையராஜா பயோபிக் என்ன ஆனது? என்ற கேள்வியும் ரசிகர்களால் எழுகிறது.
ஆயினும், இளையராஜா பயோபிக்கை தனுஷ் கைவிடமாட்டார். தயாரிப்பாளரை தேடி இளையராஜா வாழ்க்கை வரலாற்றை உருவாக்குவார் என்ற நம்பிக்கையையும் ரசிகர்கள் இணையவெளியில் தெரிவித்து வருகின்றனர்.