முன்னணி நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ரக்பி பிரீமியர் லீக் (Rugby Premier League) இரண்டாவது சீசன் நிகழ்வில் பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தேசிய கீதம், ரக்பி பிரீமியர் லீக் கீதம் மற்றும் தனது பிரபலமான ‘சஞ்சாரி’ பாடலை பாடி நிகழ்வை மேலும் சிறப்பித்தார்.
நிகழ்ச்சிக்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய ஸ்ருதிஹாசன், விளையாட்டு, ஆர்வம் மற்றும் விடாமுயற்சியின் முக்கியத்துவம் குறித்து தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
“ரக்பி பிரீமியர் லீக் போன்ற ஒரு பெரிய விளையாட்டு மேடையில் பங்கேற்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மைதானத்தில் இருந்த உற்சாகமும், ரசிகர்களின் ஆற்றலும் உண்மையிலேயே அற்புதமாக இருந்தது,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “ரக்பி மட்டுமல்ல, நீங்கள் விரும்பும் எந்தத் துறையிலும் சவால்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்தப் பயணத்தை நீங்கள் உண்மையாக நேசித்தால், கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக மாறிவிடும். அதே நேரத்தில் வெற்றிகரமான தருணங்கள் தொடர்ந்து முன்னேறுவதற்கான ஊக்கத்தை வழங்கும்,” என்றார்.
ரக்பி பிரீமியர் லீக்கின் வளர்ச்சி குறித்தும் பாராட்டு தெரிவித்த அவர், “ராகுல் போஸை பல ஆண்டுகளாக எனக்கு தெரியும். இந்த முயற்சி குறித்து அவர் பகிர்ந்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். குறிப்பாக இந்த ஆண்டு பெண்கள் அணிகளும் போட்டியில் பங்கேற்பது, இந்த லீக்கின் வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது. அதனால் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது,” என கூறினார்.
இந்தியாவில் திறமையான வீரர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக குறிப்பிட்ட ஸ்ருதிஹாசன், “திறமை எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அந்த திறமை வெளிப்படுவதற்கு நிதி ஆதரவு, அங்கீகாரம், சரியான பயிற்சி மற்றும் ஊக்கமளிக்கும் குழு மிகவும் அவசியம். அத்தகைய திறமையாளர்களுக்கு தங்கள் கனவுகளை நனவாக்க ஒரு மேடையை வழங்கும் ரக்பி பிரீமியர் லீக் போன்ற முயற்சிகள் பாராட்டுக்குரியவை,” என்றார்.
ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி இருந்தால் எந்த சவாலையும் வெற்றியாக மாற்ற முடியும் என்ற ஊக்கமூட்டும் செய்தியையும் ஸ்ருதிஹாசன் தனது உரையின் மூலம் பகிர்ந்தார்.