பெண்மை புனிதமானது. பெண்ணியம் மகத்தானது. பெண் இல்லாமல் உலகில்லை என ஆன்றோரும் சான்றோரும் எடுத்தியன்றாலும், இன்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் தொடர்வது மனிதகுலக் கேடு. என்று தரும் இந்த அவலம்.
பெண்கள் மீது நடைபெறும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான பிரச்சாரத்துக்கு ஆதரவளிப்பதற்காக நடிகை சமந்தா, ஐ.நா.மகளிர் இந்தியாவுடன் இணைந்துள்ளார். இந்த பிரச்சாரம் நவம்பர் 25-ந்தேதி முதல் டிசம்பர் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது.
‘பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான டிஜிட்டல் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிணைவோம்’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்தப் பிரச்சாரம், ஆன்லைன் வன்முறை, துஷ்பிரயோகம், தொழில்நுட்பம் மூலமாக ஏற்படும் மிரட்டல்கள் போன்றவற்றுக்கு எதிராகச் செயல்படுகிறது. இந்த முயற்சியில் இணைந்தது குறித்துப் பேசிய சமந்தா, ‘ஐ.நா.மகளிர் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவது பெருமையாக இருக்கிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் முன்பு நேரில் நடந்தது. இப்போது டிஜிட்டல் திரைகளை பின்தொடர்ந்து, பெண்களின் குரலை மவுனமாக்குகிறது, கண்ணியத்தைக் குலைக்கிறது’ என கூறியுள்ளார். இதுபோன்ற சூழலை தானும் பல முறை எதிர்கொண்டதாகக் கூறியுள்ளார். இந்தப் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் என சமந்தா தெளிவுபடுத்தினார்.