தமிழ் சினிமாவில் கடந்த காலத்தில் பிரபு நடிப்பில் ‘சிறைச்சாலை’ என்ற படம் வெளியாகி வரவேற்பு பெற்றது. தற்போது அவருடைய மகன் விக்ரம் பிரபு ‘சிறை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பற்றிய தகவல்கள் பார்ப்போம்..
விஜய் நடித்த மாஸ்டர், லியோ, விஜய் சேதுபதி நடித்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்ட படங்களை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரித்தவர் எஸ்.எஸ்.லலித்குமார். அவர் மகன் எல்.கே. அக் ஷய்குமார் நடிகராக அறிமுகமாகும் படம் ‘சிறை’. இதில் விக்ரம் பிரபு ஹீரோவாக
நடித்துள்ளார். கதாநாயகிகளாக அனந்தா, அனிஷ்மா நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
எஸ்.எஸ்.லலித்குமார் தயாரிக்கும் இப்படத்தை, வெற்றிமாறனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ், தான் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.
ஒரு போலீஸ் அதிகாரிக்கும் விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் படத்தின் மையம். இதன் கதை சிவகங்கை பின்னணியில் நடக்கிறது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு, படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி கிறிஸ்துமஸை முன்னிட்டு இப்படம் டிசம்பர் 25-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. முன்னதாக, விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘லவ் மேரேஜ்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது நினைவுகூரத்தக்கது.