ராஜமவுலி இயக்கிய ‘பாகுபலி’ படத்தை இந்திய திரையுலகே கொண்டாடியது என்பது தெரிந்ததே.
இப்படத்தில், பிரபாஸ் மற்றும் ராணா ஆகியோர் இந்த படத்தின் இரண்டு பாகங்களுக்காகவும் வேறு படங்களில் கமிட் ஆகாமல் இருந்தார்கள். முதல் பாகம் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 600 கோடிகள் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. 2017ஆம் ஆண்டு இரண்டாம் பாகம் வெளியானது.
முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை விடவும், இரண்டாம் பாகத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்ததால் படம் வணிக ரீதியாக பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது.
பாகுபலி 2 மட்டும் உலகம் முழுவதும் ரூபாய் 1400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்திய அளவில் ரூபாய் 1000 கோடிகள் வசூலைக் கடந்த முதல் திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது.
இந்நிலையில், பாகுபலி படம் வெளியாகி இந்த ஆண்டுடன் 10 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு, ராஜமௌலி தனது எக்ஸ் பக்கத்தில் படம் குறித்த மாஸான அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளார்.
அதாவது, படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து, படத்தின் இரண்டு பாகங்களையும் ஒன்றாக இணைத்து ஒரே படமாக வெளியிட போவதாக அறிவித்துள்ளார். மேலும், இந்த படம் அக்டோபர் 31-ந்தேதி ரிலீஸ் செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.