ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக செயல்படும் சென்னை பெரும்பாக்கம் கிளென்ஈகிள்ஸ் மருத்துவமனை, கல்லீரல் சிகிச்சை சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் புதிய கல்லீரல் புறநோயாளிகள் பிரிவு (Liver OPD) மையத்தை தொடங்கியுள்ளது. இந்த மையத்தை நடிகர், இயக்குநர் மற்றும் வானொலி தொகுப்பாளர் ஆர்.ஜே. பாலாஜி, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜாய் வர்கீஸ் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.
பிறவி மரபணு கல்லீரல் கோளாறுகளால் பாதிக்கப்படும் குழந்தைகள் முதல், வயது வந்தோருக்கான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வரை அனைத்து வயதினருக்கும் ஒரே இடத்தில் முழுமையான கல்லீரல் சிகிச்சை வழங்கும் வகையில் இந்த புதிய மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொடக்க விழாவில், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அனில் வினாயக், கிளென்ஈகிள்ஸ் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் எஸ். நிரஞ்சனி, மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர் பிஸ்வரூப் பால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த புதிய புறநோயாளிகள் பிரிவு, கடந்த ஏழு ஆண்டுகளில் 700-க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ள கிளென்ஈகிள்ஸ் மருத்துவமனையின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி கல்லீரல் சிகிச்சை மையங்களில் ஒன்றாக திகழும் இந்த மருத்துவமனை, ஒருங்கிணைந்த சிகிச்சை முறையை நோயாளிகளுக்கு வழங்குகிறது.
இந்த மையத்தில் குழந்தைகளுக்கான கல்லீரல் சிகிச்சை மற்றும் மாற்று அறுவை சிகிச்சை, வளர்சிதை மாற்றம் தொடர்பான கொழுப்பு கல்லீரல் நோய் (MASLD) சிகிச்சை, கல்லீரல்-சிறுநீரக இணை மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் புற்றுநோய் சிகிச்சை, மரபணு கல்லீரல் நோய்களுக்கான சிறப்பு மருத்துவ சேவைகள் உள்ளிட்ட பல்வேறு மேம்பட்ட வசதிகள் ஒரே இடத்தில் வழங்கப்படுகின்றன.
விழாவில் பேசிய அனில் வினாயக், இந்தியாவில் கல்லீரல் நோய்களின் தன்மை கடந்த சில ஆண்டுகளில் வேகமாக மாறியுள்ளதாகவும், உடல் பருமன், நீரிழிவு, மரபணு கோளாறுகள் மற்றும் கல்லீரல் புற்றுநோய் போன்ற சிக்கலான நோய்களுக்கு பல்துறை நிபுணர்கள் இணைந்து செயல்படும் சிகிச்சை முறை அவசியமாகியுள்ளது என்றும் தெரிவித்தார். அதற்கேற்ற ஒருங்கிணைந்த மருத்துவ சேவையை இந்த புதிய Liver OPD மையம் வழங்கும் என்றார்.
டாக்டர் ஜாய் வர்கீஸ் பேசுகையில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது நோயாளியின் சிகிச்சைப் பயணத்தின் இறுதிக்கட்டம் மட்டுமே என்றும், நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தகுந்த சிகிச்சை வழங்குவதே இந்த புதிய மையத்தின் முக்கிய நோக்கம் என்றும் கூறினார். மரபணு கல்லீரல் நோய்கள் முதல் கல்லீரல் புற்றுநோய் வரை அனைத்து நிலைகளுக்கும் ஒருங்கிணைந்த சிகிச்சை வழங்கும் மேம்பட்ட மருத்துவ அமைப்பாக இது செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் அதிக அளவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட மருத்துவமனையாக கிளென்ஈகிள்ஸ் திகழ்கிறது. இதுவரை 200-க்கும் மேற்பட்ட மாற்று அறுவை சிகிச்சைகள் இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், 2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் ‘சிறந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக் குழு’ விருதையும் மருத்துவமனை பெற்றுள்ளது.
உலகின் முதல் இணைந்த உயிருள்ள நன்கொடையாளர் கல்லீரல்–சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல தேசிய மற்றும் உலகளாவிய மருத்துவ சாதனைகளைப் படைத்துள்ள கிளென்ஈகிள்ஸ் மருத்துவமனை, அரிதான மற்றும் சிக்கலான கல்லீரல் நோய்களுக்கான சிகிச்சையில் தனது முன்னணி இடத்தை தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறது.