நடிகை த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார் மற்றும் அபர்ணா பாலமுரளி இணைந்து நடிக்கும் புதிய தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளது. ‘ஏர்லிஃப்ட்’, ‘செஃப்’, ‘பிப்பா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜா கிருஷ்ண மேனன் இப்படத்தை இயக்குகிறார்.
பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபலுடன் இணைந்து தயாரிக்கும் இப்படம், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தமிழ் தயாரிப்பாக உருவாகிறது. இன்னும் தலைப்பு சூட்டப்படாத இப்படம், டார்க் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ஜானரில் உருவாகி வருவதுடன், முழுக்க முழுக்க பெண்களை மையமாகக் கொண்ட கதைக்களத்தைக் கொண்டுள்ளது.
தமிழ், மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் தங்களது நடிப்பால் கவனம் பெற்ற த்ரிஷா, ராதிகா சரத்குமார் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகிய மூவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் மேலும் பல முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர்.
இப்படத்தை குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக், சுந்தர் ஆரோன், விகாஸ் சர்மா மற்றும் அமித் தல்மியா ஆகியோர் தயாரிக்கின்றனர். ராஜேஷ் மேனன் மற்றும் ஜார்ஜ் கேமரூன் இணைத் தயாரிப்பாளர்களாகவும், அபினவ் மெஹ்ரோத்ரா கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.
- Advertisement -
பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனர் மற்றும் தலைவர் குமார் மங்கத் பதக் கூறுகையில், தமிழ் சினிமா எப்போதும் துணிச்சலான மற்றும் தனித்துவமான கதைகளை வழங்கி வருவதாகவும், தங்களது முதல் தமிழ் தயாரிப்பும் புதிய சினிமா அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் பேசுகையில், இது தனது முதல் தமிழ் திரைப்படம் மட்டுமின்றி, முதல் உளவியல் திகில் திரைப்படம் என்றும், முழுக்க பெண்களை மையமாகக் கொண்ட தனது முதல் படைப்பாகவும் அமைந்துள்ளதாகக் கூறினார். த்ரிஷா, ராதிகா மற்றும் அபர்ணா போன்ற திறமையான நடிகர்களுடன் பணியாற்றுவது உற்சாகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லோகோமோட்டிவ் குளோபல் தயாரிப்பாளர்கள் சுந்தர் ஆரோன் மற்றும் விகாஸ் ஷர்மா கூறுகையில், திகில், மர்மம் மற்றும் மனித உணர்வுகளை இணைத்துள்ள இப்படத்தின் கதை தங்களை வெகுவாக கவர்ந்ததாக தெரிவித்துள்ளனர். லண்டனில் படமாக்கப்படும் இப்படம், தங்களது தரமான த்ரில்லர் திரைப்படங்களின் வரிசையில் முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
வலுவான கதைக்களம், மூன்று முன்னணி நடிகைகளின் கூட்டணி மற்றும் ராஜா கிருஷ்ண மேனனின் தனித்துவமான கதை சொல்லல் ஆகியவற்றால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.