‘தக் லைஃப்’ பட புரமோஷனில் ‘தமிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது’ என தெரிவித்திருந்தார் கமல்ஹாசன். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கன்னட அமைப்பினர், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டால் மட்டுமே படத்தை கர்நாடகாவில் வெளியிடுவோம் என அறிவித்தனர்.
இதனையடுத்து, கமல் விளக்கம் அளித்து கடிதம் அளித்தபோதும் அதில் மன்னிப்பு என்ற வார்த்தை இல்லையே என நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்கள். இதனால், கர்நாடகாவில் ‘தக்லைஃப்’ திரைப்படத்தை திரையிடவில்லை என கமல் அறிவித்தார்.
இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தில் தக் லைஃப் படத்தை திரையிடும்போது, பாதுகாப்பு வழங்கக் கோரி கர்நாடக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அப்போது, இந்த வழக்கு விசாரணையின்போது, திரைப்படம் தடையில்லா சான்றிதழ் பெற்றிருந்தால், அதனை எந்த பிரச்னையில்லாமல் திரையிடுவதற்காக பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும், கன்னட மொழி குறித்து கமலஹாசன் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோர வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட முடியாது. உயர்நீதிமன்றம் எப்படி கூறலாம்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கன்னட மொழிக்கு எதிராக கமல் பேசியிருந்தால், பெங்களூருவைச் சேர்ந்த அறிவார்ந்த மக்கள், அவர் சொன்னது தவறு என எடுத்துக்கூற வேண்டும் என கூறிய உச்சநீதிமன்றம், தணிக்கை சான்றிதழ் பெற்ற எந்த படமாக இருந்தாலும் அது வெளியாவதை தடுக்க முடியாது என தெரிவித்திருந்தது.
இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, கர்நாடக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தக்லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியானால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என பிரமாண பத்திரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிகழ்வுகளால் தக் லைஃப் படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளது.