நாகர்கோவிலில் உள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. Apex Laboratories நிறுவனத்தின் CSR திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இயக்குநரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தலைமை வகித்தார்.
நாகர்கோவில் ரவுண்ட் டேபிள் 176 மற்றும் நாகர்கோவில் லேடீஸ் சர்க்கிள் 196 ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியனும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், ‘ஸ்ரீ பாலாஜி ஆர்த்தோடிக்ஸ்’ நிறுவனம் தயாரித்த 27 செயற்கைக் கால்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 5 பெண்களுக்கு மின்சார ஆட்டோக்களும் வழங்கப்பட்டன.
சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான இந்த சமூக நலத்திட்டம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்டது. விழாவில் சௌந்தர்யா ரஜினிகாந்த் பயனாளிகளுக்கு நேரில் உதவிகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.