சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ என்ற படத்தில் நடித்து வருவது தெரிந்ததே. இந்நிலையில் ஒரு பெண் அவரிடம், ‘சார், இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை சொல்ல வேண்டும். சும்மா எதையாவது சொல்லக்கூடாது, கல்லூரி நாட்கள் பற்றிச் சொல்ல வேண்டும்’ என கேட்டார்.
அப்போது தயங்காமல், சிவகார்த்திகேயன் தனது ஒருதலைக் காதலை வெளிப்படுத்தினார். ‘எனக்கு ஒரு ஒருதலைக் காதல் இருந்தது. ஆனால், அது சில நாட்களில் கரைந்து போனது. ஏனென்றால், அவள் அவ்வளவு சீக்கிரம் இன்னொரு பையனுடன் கமிட் ஆகிவிட்டாள். ஒருவேளை, என் வாழ்க்கையில் யாரிடமும் சொல்லாத ரகசியம் இதுவாகத்தான் இருக்கும். எங்கள் கல்லூரி நண்பர்கள் சிலருக்கு மட்டுமே தெரியும்.
அப்போது, எதுவும் செய்யப் பயமாக இருந்தது, ஏனென்றால் ‘உங்கள் மகன் இப்படிச் செய்துவிட்டான்’ என்று வீட்டில் பெற்றோரிடம் சொல்லிவிட்டால் பிரச்சினை ஆகிவிடும் என்று அமைதியாகி விட்டேன். நான் எந்த விதத்திலும் குறும்புத்தனம் செய்பவன் அல்ல. நான் டிவியில் தொகுப்பாளராக இருந்தபோது, ஒரு மாலில் தூரத்திலிருந்து அந்தப் பெண்ணை மீண்டும் பார்த்தேன். ஆனால், பேசவில்லை.
அவள் வேறு ஒரு பையனைத் திருமணம் செய்து கொண்டாள் என்று தெரியவந்தது. முன்பு நான் பார்த்தபோது அவள் காதலித்த பையன் வேறு ஒருவன். அப்பாடா, அவனுக்கும் அவள் கிடைக்கவில்லை என்று நிம்மதியுடன் மகிழ்ச்சி அடைந்தேன்’ என கூறியுள்ளார்.
முதல் காதல் தோல்வி அடைந்ததை அடுத்து தன்னுடைய மாமா பெண்ணான ஆர்த்தியை திருமணம் செய்துகொண்டார் சிவகார்த்திகேயன். இந்த ஜோடிக்கு ஆராதனா, குகன் தாஸ் மற்றும் பவன் என 3 பிள்ளைகள் உள்ளனர்.