வெற்றிமாறன் கதை கொடுக்க, கௌதம் மேனன் இயக்க, இதோ ஒரு திரைப்படம் உருவாக இருக்கிறது. இது பற்றிய விவரம் வருமாறு:
தமிழ்த்திரையில் தொடர்ந்து நடிப்பில் பயணித்த இயக்குனர் கௌதம் மேனன், தற்போது மீண்டும் படம் இயக்குவதில் பிஸியாகி உள்ளார்.
மம்முட்டி தயாரித்து நடிக்கும் ‘டோமினிக் அன்ட் தி லேடீஸ் பர்ஸ்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து, விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படமும் வெளியாகும் வேலையும் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, கெளதம் மேனன் இயக்கத்தில், அடுத்து யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், சமீபத்தில் மதகஜராஜா படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய நடிகர் விஷால், தான் அடுத்ததாக கெளதம் மேனன் டைரக்ஷனில் நடிப்பதாக கூறியிருந்தார். அதாவது, நடிகர் விஜய் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட ‘யோஹன்’ படத்தைதான் விஷாலை வைத்து கெளதம் மேனன் இயக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனால், தற்போது திடீர் திருப்புமுனையாக கெளதம் மேனன் தன்னுடைய அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்க, ரவி மோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறியுள்ளார்.
அதன்படி, தான் அடுத்ததாக வெற்றிமாறன் எழுதிய கதையை டைரக்ட் செய்ய உள்ளதாகவும், அதில் ஹீரோவாக நடிக்க ரவி மோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால், விஷால் நடிக்கவிருக்கும் படத்தை கெளதம் மேனன் அடுத்த ப்ராஜெக்டாக வைத்துள்ளார் என கூறப்படுகிறது.