மோகன்லாலின் ‘திரிஷ்யம் 3’க்கு புதிய சிக்கல்!

மோகன்லால், மீனா உள்ளிட்டோர் நடிப்பில் இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கி வரும் ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையைச் சுற்றி புதிய சட்டப் பிரச்சனை உருவாகியுள்ளது. திரைப்படத்தின் பிரத்யேக தெலுங்கு உரிமைகள் தங்களிடம் இருப்பதாகக் கூறும் ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

ஸ்ரீப்ரியா சேதுபதி மற்றும் ராஜ்குமார் சேதுபதி தலைமையிலான இந்த நிறுவனம், ‘திரிஷ்யம் 3’ படத்தின் தெலுங்கு மொழி மறுஆக்கம், தயாரிப்பு மற்றும் வெளியீட்டு உரிமைகள் மீதான முழுமையான மற்றும் பிரத்யேக உரிமை தங்களுக்கே சொந்தமானது என மனுவில் குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து, ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்தின் எம்.ஜே. ஆண்டனி, இயக்குநர் ஜீத்து ஜோசப், பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸ் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய தரப்பினர் யாரும் ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தை தெலுங்கில் எந்த வடிவிலும் தயாரிக்கவோ, மறுஆக்கம் செய்யவோ அல்லது வெளியிடவோ கூடாது என நிரந்தரத் தடை உத்தரவு வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மே 20, 2026 அன்று விசாரணைக்கு வந்தபோது, ராஜ்குமார் தியேட்டர்ஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே. ரவி ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். வாதங்களைப் பதிவு செய்த சென்னை உயர் நீதிமன்றம், எதிர்மனுதாரர்கள் மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் அல்லது வெளியீட்டு உரிமைகள் தொடர்பாக யாரேனும் ஒப்பந்தம் அல்லது வணிக ரீதியான உடன்படிக்கையில் ஈடுபட்டால், அது அவர்களது சொந்த பொறுப்பிலேயே அமையும் என்றும், அத்தகைய ஒப்பந்தங்கள் அனைத்தும் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்றும் ராஜ்குமார் தியேட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘திரிஷ்யம் 3’ வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள் மத்தியில், இந்த உரிமைச் சர்ச்சை தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Drishyam 3mohanlalNew Trouble for Mohanlal’s ‘Drishyam 3’Sripriyaதிரிஷ்யம் 3