பான் இந்தியா கலாச்சார ஓட்டத்தில், சிறு பட்ஜெட் படங்கள் அதனை முந்திச் செல்வது ஏன்? என்பது சிந்திக்கத்தக்கது தானே.
ஆம், அறிமுக இயக்குநர் ஜே.பி. துமிநாட் இயக்கத்தில் கடந்த ஜூலை 25 வெளியான படம் ‘சு ஃப்ரம் சோ’. அதாவது, சுலோச்சனா ஃபிரம் சோமேஷ்வரா. இந்த படம் பெரிய அளவில் எவ்வித விளம்பரமும் இல்லாமல் திரையரங்குகளில் வெளியானது. எனினும் ஓரிரு நாட்களிலேயே இப்படம் பற்றிய பாசிட்டிவ் விமர்சனங்கள் பரவின.
ரூ.6 கோடி சின்ன பட்ஜெட்டில் உருவான இப்படம் இதுவரை ஆச்சரிய வகையில் நாடு முழுவதும் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமின்றி, புக் மை ஷோ தளத்தில் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமாக டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. கடந்த ஆகஸ்ட் 1-ந்தேதி கேரளாவில் வெளியான இப்படம் அங்கும் பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ் பி ஷெட்டியின் லைட்டர் புத்தா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தின் கேரள உரிமையை துல்கர் சல்மானின் வேஃபேரர் நிறுவனம் பெற்றுள்ளது. தெலுங்கில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிட்டது.
எவ்வளவு பெரிய பட்ஜெட்டில் உருவான படமாக இருந்தாலும் சரி, இதுபோல சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி, கதை, திரைக்கதை நன்றாக இருந்தால் எந்தவித விளம்பரமும் இல்லாமலே படம் மக்களைப் போய் சேரும் என்பதற்கு ‘சு ஃப்ரம் சோ’ மற்றொரு சான்று.
முன்னதாக, பாலிவுட் வெளியான புதுமுகங்கள் நடித்த படமான ‘சையாரா’ தற்போது வெளிநாடுகளிலும் வசூலை சாதனை படைத்து வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.