பூச்சிக்கொல்லி விவசாயத்தால் மனிதர்களின் உடல்நலத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன் இன் புரோகிரஸ்’ (The India Story: Slow Poison in Progress) திரைப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
நடிகை காஜல் அகர்வால் மற்றும் நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், நாள்தோறும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மைகளை சமூக அக்கறையுடன் பதிவு செய்கிறது.
Zee Studios நிறுவனம், MIG Production & Studios நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் இப்படத்தை சேட்டன் DK இயக்கியுள்ளார். கதையை எழுதி தயாரித்துள்ளவர் சாகர் B. ஷிண்டே. தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், ஜூலை 24, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
வெளியாகியுள்ள டீசர், அன்றாட உணவுப் பொருட்களில் கலக்கும் நச்சுப் பொருட்களால், குறிப்பாக இளம் தலைமுறையினரின் உடல்நலத்திற்கு ஏற்படும் ஆபத்துகளை மையமாகக் கொண்டு நகர்கிறது. இந்த உண்மைகளை வெளிக்கொணர போராடும் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படேவின் கதாபாத்திரங்கள் டீசரில் வலுவாக சித்தரிக்கப்பட்டுள்ளன.
இப்படம் குறித்து இயக்குநர் சேட்டன் DK கூறுகையில், “‘தி இந்தியா ஸ்டோரி’ என்பது வெறும் திரைப்படம் மட்டுமல்ல; சமூகமாக நாம் பேச வேண்டிய முக்கியமான ஒரு விவாதம். பூச்சிக்கொல்லி விவசாயத்தின் அதிர்ச்சியூட்டும் உண்மைகளையும், அது உருவாக்கும் அமைதியான உடல்நல நெருக்கடியையும் இந்தப் படத்தின் மூலம் மக்களிடம் கொண்டு செல்ல விரும்பினோம். டீசர் என்பது அதன் சிறிய முன்னோட்டம் மட்டுமே. மக்கள் தங்கள் உணவுத் தட்டில் என்ன வருகிறது என்பதை சிந்திக்க வைப்பதே எங்கள் நோக்கம்,” என்றார்.
நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே கூறுகையில், “ஒவ்வொரு குடும்பத்தையும் பாதிக்கும் இந்தப் பிரச்சினையின் நீண்டகால விளைவுகளை நாம் பெரும்பாலும் சிந்திப்பதில்லை. ஒரு சாதாரண தந்தையின் உணர்வுப்பூர்வமான போராட்டத்தை என் கதாபாத்திரம் பிரதிபலிக்கிறது. இது பொழுதுபோக்கு மட்டுமல்ல, அவசியமான ஒரு சமூக விவாதத்தையும் தொடங்கும் திரைப்படம்,” என்று தெரிவித்தார்.
நடிகை காஜல் அகர்வால் கூறுகையில், “ஒரு தாயாக இந்தக் கதை என்னை மிகவும் ஆழமாகத் தொட்டது. இன்றைய பெற்றோர்களின் அச்சங்களையும், நாம் சாப்பிடும் உணவின் தாக்கத்தையும் இந்தப் படம் பேசுகிறது. எதிர்கால தலைமுறையின் நலனைப் பற்றி மக்கள் விழிப்புணர்வுடன் சிந்திக்க இந்தப் படம் உதவும் என்று நம்புகிறேன்,” என்றார்.
இப்படத்தில் இணை தயாரிப்பாளர்களாக ஸ்வாதி விநாயக் சைந்தானி, அனிதா ஜாதவ், விநாயக் சைந்தானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே, பிரேம் ஜோஷி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். ஒளிப்பதிவை நிஷாந்த் பகவத், இசையை மங்கேஷ் தாக்டே, படத்தொகுப்பை ஆஷிஷ் மாத்ரே, பாடல்களை ஷகீல் அஜாமி, ஒலி வடிவமைப்பை அன்மோல் பாவே மேற்கொண்டுள்ளனர்.