பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் கவின் நடிக்கும் ‘பேர் சொல்லும் பிள்ளை’ திரைப்படத்தின் பாரம்பரிய படப்பிடிப்பு தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இப்படத்தின் தொடக்க விழாவை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு கிளாப் அடித்து அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
தமிழ் சினிமாவில் வெற்றி பெற்று முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து வரும் நடிகர் கவின், இப்படத்தில் கதையின் நாயகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
‘தண்டட்டி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராம் சங்கையா இப்படத்தை இயக்குகிறார். கதாநாயகியாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிக்கிறார்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு ஆர். வேல்ராஜ் மேற்கொள்கிறார். இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் பணியாற்றுகிறார். படத்தொகுப்பை ஜி. மதன் கவனிக்க, கலை இயக்கத்தை எம். கதிரவன் மதி மேற்கொள்கிறார்.
கிராமிய பின்னணியில், பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ். லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார். இணை தயாரிப்பாளராக ஏ. வெங்கடேஷ் பணியாற்றுகிறார்.
விழாவில் இயக்குநர்கள் தியாகராஜன் குமாரராஜா, ஆண்ட்ரூ லூயிஸ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டணியில் உருவாகும் ‘பேர் சொல்லும் பிள்ளை’ திரைப்படம் ரசிகர்களிடமும், திரையுலகினரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.