இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து, பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துகொண்டார் தேவயானி என்பது தெரிந்ததே. தற்போது அந்நிகழ்வுகள் குறித்து மனம் திறந்து அவர் தெரிவிக்கையில்,
‘நான் பிறந்தது மும்பையில் தான். அங்கு தான் படித்தேன். எனக்கு நடிப்பு, நடனத்தின் மீது ஈடுபாடு இருந்ததால் நடிகையாக வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அப்போது ஹிந்தி படம் ஒன்றில் அறிமுகமானேன். இப்போது வரைக்கும் அந்த படம் வெளியாகவே இல்லை. அதுதான் நான் நடித்த முதல் படம். அதன் பிறகு, மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்தேன். தமிழில் ‘தொட்டா சிணுங்கி’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது.
‘சூர்யவம்சம்’ படத்தில் ராஜகுமாரன் அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்தார். அப்போதே எனக்கு அவரை தெரியும். பின் ‘நீ வருவாய் என’ படத்திலும் இருந்ததால், அந்த படத்தின் மூலம் அவரைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர் அந்த படத்தில் எழுதிய காதல் வசனங்கள் எல்லாமே எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஒரு நாள் அவர் என்னிடம் காதலை சொன்னார். நான் அப்போது முடியாது என்று சொல்லிவிட்டேன். ஒரு கட்டத்தில், நான் அவரை காதலிக்க தொடங்கிவிட்டேன்.
திருமணம் குறித்து வீட்டில் பேசும்போது வீட்டில் யாருக்கும் பிடிக்கவே இல்லை. அவர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். என் வாழ்க்கையில் என் அம்மாவை மீறி நான் செய்த ஒரே ஒரு விஷயம் இது தான். அவர்களின் பேச்சை மீறி நான் எதுவுமே செய்ததில்லை.
ஆனால், முதன்முறையாக திருமண விஷயத்தை தைரியமாக முடிவு எடுத்து திருமணம் செய்து கொண்டேன். நாளடைவில் அது சரியாகிவிடும் என நினைத்தேன். ஆனால், அது சரியாகவே இல்லை.
என்னுடைய முதல் குழந்தை பிறந்தபோது கூட அம்மா என்னை வந்து பார்க்கவே இல்லை. அது மிகவும் மனவேதனையை ஏற்படுத்தியது. அந்த கவலை எதுவுமே தெரியாதபடி என்னை என்னுடைய கணவர் பார்த்துக் கொண்டார். இரண்டாவது குழந்தை பிறந்து சில ஆண்டுகள் கழித்து தான் என்னுடைய அம்மாவை பார்த்தேன். நான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று, அம்மாவான பிறகு தான் எனக்கு புரிந்தது.
இது எல்லாம் நடக்க வேண்டும் என்று என்னுடைய தலையில் எழுதி இருக்கிறது. அது என் வாழ்க்கையில் நடந்து இருக்கிறது. எங்கோ மும்பையில் பிறந்த நான், தமிழ்நாட்டிற்கு வந்து திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்பது என்னுடைய விதி. அதன்படி நடந்து விட்டது’ என தெரிவித்துள்ளார்.