தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது சோஷியல் மீடியா பக்கத்தில், விஜய் சேதுபதி ‘அரசன்’ படத்தில் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதனால் ‘அரசன்’ படத்தில் விஜய் சேதுபதி எந்த மாதிரியான ரோலில் நடிக்கின்றார் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முன்னதாக, விஜய் சேதுபதி வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களில் நடித்துவிட்டார். இதைத்தொடர்ந்து 3-வது முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சிம்புவிற்கு இணையான ரோலில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.
‘வடசென்னை’ படத்தில் ‘ராஜன்’ ரோலில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. சில காரணங்களால் விஜய் சேதுபதி அப்படத்திலிருந்து விலக, அமீர் அந்த ரோலில் நடித்து வரவேற்பு பெற்றார். தற்போது அரசன் படத்தில் ‘ராஜன்’ போன்ற ரோலை விஜய் சேதுபதிக்கு வழங்கியுள்ளார் வெற்றிமாறன் என கூறப்படுகிறது.
சிம்பு-விஜய் சேதுபதி இணைந்து ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்திருந்தனர். அதன் பிறகு தற்போது மீண்டும் ‘அரசன்’ படத்தின் மூலம் இணைந்திருக்கின்றனர். இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் கோவில்பட்டியில் துவங்கும் என சொல்லப்படுகிறது. வெற்றிமாறன் தற்போது படப்பிடிப்பு நடைபெறும் லொகேஷனில் இருக்கிறார். மிக விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்குள் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.