‘பேட் கேர்ள்’ படத்தின் தயாரிப்பாளர் வெற்றிமாறன் என்பது தெரிந்ததே. இப்படம் தற்போது சர்ச்சைக்குள்ளாகி அதுவே பெரிய விளம்பரமாகவும் ஆகியுள்ளது.
வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்நிலையில, நாளை மறுநாள் 5-ந்தேதி ரிலீசாகவுள்ளது. இப்படம் குறித்து, இயக்குநர் வர்ஷா பரத் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘பேட் கேர்ள் படத்தை தயாரித்தவர்கள், படத்துக்கு ஆதரவாக இருந்தவர்கள், டிரெய்லரை வெளியிட்டவர்கள் உள்பட அனைவரின் குடும்பத்தில் இருக்கும் பெண்களின் போட்டோவை, நம் ஊரில் மண்ணையும் பெண்ணையும் காப்பாற்றுபவர்கள் என சொல்பவர்கள் தான் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டனர்.
நாங்கள் கலாச்சாரத்தை சீரழிக்கிறோம் என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், உண்மையிலேயே பெண்களைத் தான் கலாச்சாரம் காப்பாற்ற வேண்டும். கலாச்சாரத்தை பெண்கள் காப்பாற்ற வேண்டியதில்லை. பெண்களுடைய வேலையும் அது கிடையாது’ என தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மிஷ்கின் பேசும்போது ‘இரவு 2 மணிக்கு ‘பேட் கேர்ள்’ படத்தை பார்த்தேன். இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. கலைப் படைப்புகள் சமூகத்தை கெடுக்கிறது என்கிறார்கள். உண்மையிலேயே தவறான படைப்பு சமூகத்தை கெடுக்கிறது. நல்ல படைப்பு சிந்திக்க செய்கிறது. இந்த படத்துக்கு சென்சார் போர்டில் பெரிய போராட்டம். நிறைய விமர்சனங்கள். பல காட்சிகள் வெட்டி எடுக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு தணிக்கை வாரியத்துக்கு உரிமை உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.