உலக இசை தினத்தில் 15,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் கொண்டாடிய அனிருத்

உலக இசை தினத்தை முன்னிட்டு சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடைபெற்ற ‘வைப் வித் அரவிந்த்’ இசை நிகழ்ச்சி, ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்திரனின் ரசிகர்களால் கொண்டாட்டமாக மாற்றப்பட்டது. 15,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்ட இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி, இசை மற்றும் ரசிகர்களின் உற்சாகத்தால் களைகட்டியது.

பிராண்ட் அவதார், அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ், யுனிவர்சல் மியூசிக் இந்தியா மற்றும் எக்ஸ்பிரஸ் அவென்யூ இணைந்து நடத்திய இந்த நிகழ்வில், அனிருத்தின் இசைப் பயணத்தையும் அவரது புதிய சுயாதீன இசை முயற்சியான ‘அரவிந்த்’ பாடலையும் சிறப்பாக கொண்டாடினர்.

நிகழ்ச்சி ‘மொட்டமாடி மியூசிக்’ இசைக்குழுவின் நேரடி இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து டிஜே தீபிகா தனது துள்ளலான இசையால் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். பின்னர் ரசிகர்களின் கரகோஷத்துக்கு மத்தியில் மேடையேறிய அனிருத், தனது சூப்பர் ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களை கொண்டாட்ட மனநிலைக்கு அழைத்துச் சென்றார்.

நிகழ்வில் பேசிய அனிருத், எக்ஸ்பிரஸ் அவென்யூவுடன் தனக்குள்ள நீண்டகால நினைவுகளை பகிர்ந்துகொண்டார். ‘Why This Kolaveri Di’ உலகளவில் பிரபலமான காலத்தில் இதே இடத்தில் ரசிகர்களை சந்தித்ததை நினைவுகூர்ந்த அவர், தற்போது தனது சுயாதீன இசை நிறுவனமான அல்புகெர்கி ரெக்கார்ட்ஸின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ பாடலை கொண்டாட அதே இடத்திற்கு மீண்டும் வந்திருப்பது மிகவும் உணர்ச்சிகரமான தருணம் என தெரிவித்தார்.

‘அரவிந்த்’ பாடல் தனது நெருங்கிய நண்பருக்காக அளித்த வாக்குறுதியின் வெளிப்பாடாக உருவானது என்றும், தனது இசைப் பயணத்தில் மிகவும் நெருக்கமான படைப்புகளில் இதுவும் ஒன்று என்றும் கூறினார்.

உலகின் பல நகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தாலும், தனது மனதுக்கு மிகவும் நெருக்கமான நகரம் எப்போதும் சென்னைதான் என அனிருத் தெரிவித்தார். சென்னை ரசிகர்களின் அன்பும், உற்சாகமும் எப்போதும் தனித்துவமானது என்று அவர் கூறியபோது அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது.

நிகழ்வின் மற்றொரு சிறப்பம்சமாக ரசிகர்களின் பங்களிப்பு அமைந்தது. பல்வேறு கலந்துரையாடல்கள், பொழுதுபோக்கு நிகழ்வுகள் மற்றும் ‘வால் ஆஃப் ஃபேம்’ பகுதியில் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளையும் நினைவுகளையும் பதிவு செய்தனர்.

15,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஒன்று கூடிய இந்த நிகழ்வு, இசை மக்களை எவ்வாறு ஒன்றிணைக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்தது. ‘வைப் வித் அரவிந்த்’ வெறும் இசை நிகழ்ச்சியாக அல்லாமல், இசை, நட்பு, நினைவுகள் மற்றும் கலைஞர்-ரசிகர் உறவை கொண்டாடிய மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

AnirudhAnirudh Celebrates World Music Day with Over 15000 Fansஅனிருத்